murasoli thalayangam
“ஆளுநர் அல்ல ‘ஓடுநர்’ – ஆர்.என்.ரவிக்கு ஆளுநர் பதவி எதற்கு?” – கடுமையாக விமர்சித்த முரசொலி தலையங்கம்!
ஆளுநர் பார்க்க வேண்டியது இரண்டே வேலைகள். ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை சட்டமன்றத்திற்கு வந்து வாசிப்பது ஒன்று. அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது இரண்டு. இந்த இரண்டையும் செய்யாதவர், செய்ய மனமில்லாதவர் ஆளுநராக ஏன் இருக்க வேண்டும்? இருந்து, தமிழ்நாட்டு மக்களின் கழுத்தை ஏன் அறுக்க வேண்டும்? என முரசொலி தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.
”ஓடுநர்!” என்ற தலைப்பில் முரசொலி தீட்டியுள்ள தலையங்கம் பின்வருமாறு:-
அவர் பார்க்க வேண்டியது இரண்டே வேலைகள். ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை, சட்ட மன்றத்துக்கு வந்து வாசிப்பது ஒன்று. அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது இரண்டு. இந்த இரண்டையும் செய்யாதவர், செய்ய மனமில்லாதவர் ஆளுநராக ஏன் இருக்க வேண்டும்? இருந்து, தமிழ்நாட்டு மக்களின் கழுத்தை ஏன் அறுக்க வேண்டும்?
சட்டமன்றம் ஓராண்டில் கூடும் முதலாவது கூட்டத் தொடரின் முதலாவது நாளில் ஆளுநர்கள் உரையாற்ற வேண்டும் என்பது பிரிட்டிஷ் ஆட்சி காலத்து சடங்கு. அது இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அரசின் கொள்கை அறிக்கையை, அரசு தயாரித்துத் தரும். அதனை ஆளுநரானவர், அவையில் வாசிக்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால் அதனை ஏதோ பெரிய மரியாதையாக நினைத்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்து வருகிறார் ஆர்.என்.ரவி.
2022 ஆம் ஆண்டு மட்டும் அரசின் உரையை முழுமையாக ஆர்.என்.ரவி வாசித்தார். 2023 ஆம் ஆண்டு உரையில் சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர், மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை போன்ற சொற்களை அவர் வாசிக்கவில்லை. மாறாக சில சொற்களைச் சேர்த்து வாசித்தார். ‘அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவைக் குறிப்பில் ஏறும்’ என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றியது, தேசிய கீதம் ஒலிக்கும்போதே அதற்கு மரியாதை செலுத்தாமல் வெளியேறினார் ரவி.
2024 ஆம் ஆண்டு அவைக்கு வந்தார். அவரது உரையை அவர் வாசிக்கவில்லை. தமிழ் உரையை அவைத்தலைவர் அப்பாவு வாசித்தார். ‘தொடக்கத்தில் தேசிய கீதம் பாட வேண்டும்’ என்று புதுக்கரடி விட்டார் ரவி. இதே காரணத்தைத்தான் 2025 ஆம் ஆண்டு சொன்னார். உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறினார். இப்போதும் நேற்றைய தினம் உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறி இருக்கிறார்.
அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதும், இறுதியாக தேசிய கீதம் பாடுவதும்தான் தமிழ்நாட்டு மரபு. அதை விடுத்து, எடுத்தவுடன் தேசிய கீதம் பாட வேண்டும் என்பது ரவியின் முரண்டு ஆகும். ரவி எத்தனை தடவை சொன்னாலும் இந்த மரபு மாறாது. மாற்ற முடியாது. மாற்ற மாட்டார்கள் என்பதை அவரும் அறிவார். அப்படி இருக்கும் போது, கிண்டியிலேயே அவர் இருக்க வேண்டியதுதானே? எதற்காக அவர் கோட்டை வரைக்கும் வந்து பெட்ரோலை வீணடிக்க வேண்டும்? மீடியாக்களுக்கு பிரேக்கிங் கொடுக்கும் மேனியாவாக இது இருக்கலாம்?
அறிக்கையை அவரே தயாரித்து வருகிறார். அவ்வளவும் அபத்தம். தமிழ்நாட்டைக் கொச்சைப்படுத்தும் அறிக்கை. ரத்தவோட்டம் முழுக்கவே தமிழ்நாட்டுக்கு எதிரான கெட்ட ரத்தம் ஓடுபவரால்தான் அப்படி ஒரு அறிக்கையை வெளியிட முடியும். ‘தமிழ்நாடு முன்னேறுகிறதே’ என்ற வயிற்றெரிச்சலில் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் சிலரால் சுற்றி வளைக்கப்பட்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி என்பது அவர் வெளியிட்ட அறிக்கை.
தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கி, தினந்தோறும் ஊரைச் சுற்றிக் கொண்டு, யாரோ போட்டுக் கொடுத்த மேடையில் போய் அமர்ந்து கொண்டு, தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு விழுமியங்களையும் அசிங்கப்படுத்துவதே தனது வேலையாக வைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி.
தமிழ்நாட்டின் மக்களுக்குத் தேவையான சட்டங்களுக்கு எல்லாம் கையெழுத்துப் போடாமல் ஊறுகாய் பானையில் போட்டு ஊற வைத்து வருகிறவர் இவர் என்று நாடும் நாட்டு மக்களும் அறிவார்கள். ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யும் சட்டத்தையே நிறுத்தி வைத்தவர் என்பதும், ஆன்லைன் ரம்மி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை தனது மாளிகைக்கு அவர் வரவழைத்துப் பார்த்தார் என்பதும் நாட்டு மக்கள் அறிந்தது ஆகும். இவரது செயல்பாடுகள் அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று நாம் மட்டும் சொல்லவில்லை, உச்சநீதிமன்றமே சொல்லி இருக்கிறது.
எத்தனை தடவை உச்சநீதிமன்ற நீதிபதிகளால் தலையில் ஓங்கிக் கொட்டப்பட்டுள்ளார் ரவி என்பது அவருக்குத் தெரியாது. ஒவ்வொரு முறையும் அவரை நாக்கை பிடுங்குவதைப் போல உச்சநீதிமன்றம் கேள்விகள் கேட்கிறது. ஆனாலும் அது அவருக்கு உறைக்கவில்லை. உணரவில்லை. தன்னைத் திருத்திக்கொள்ள முன் வரவில்லை. அவர் நிறுத்தி வைத்த சட்டங்களை விடுவித்தது உச்சநீதிமன்றம். அதன்பிறகு எப்படி அவரால் கிண்டியில் வாழ முடிகிறது என்பது தெரியவில்லை.
தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது, பொருளாதார வளர்ச்சியையும், தொழில் முதலீடுகளையும், கல்வி வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியையும் அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்து கொண்டு இருக்கிறார். உள்ளுக்குள் உட்கார்ந்து ஓட்டையைப் போட்டுக் கொண்டு இருக்கிறார். அவதூறுகளைப் பரப்பி வருகிறார். முன்பாவது அவரது பதவிக்கு மரியாதை தரப்பட்டு வந்தது. இப்போது அதனையும் இழந்து நிற்கிறார்.
சட்டமன்றத்தை விட்டு ஓடும் இந்த ஓடுநர், தமிழ்நாட்டை விட்டு ஓடும் நாள் எந்நாளோ?
Also Read
-
பழைய நிலங்களின் வீட்டுப் பட்டா குறித்து வந்த குட் நியூஸ்... அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
-
உங்கள் எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி! 300 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை:துணை முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!
-
ரூ.78.41 கோடி... 13 மாவட்டங்களில் 26 முடிவுற்ற திட்டப்பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
சுப்பிரமணியபுரத்தில் ரூ.62.68 கோடி 396 அடுக்குமாடி குடியிருப்புகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!