murasoli thalayangam
சாகித்ய அகாடமி விருது நிறுத்தத்தின் எதிரொலி.. “பா.ஜ.க. அரசின் தலையில் விழுந்த இரட்டை அடி!” - முரசொலி!
முரசொலி தலையங்கம்
20.01.2025
இந்திய இலக்கியங்களை காக்கும் முதலமைச்சர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் இலக்கியங்களை மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து மொழிகளையும் காக்கும் முதலமைச்சராக உயர்ந்து காட்சி அளிக்கிறார். 'தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய அளவிலான இலக்கிய விருதுகள் வழங்கப்படும்' என்ற அவரது அறிவிப்பு இந்திய இலக்கியவாதிகள் அனைவரையும் மகிழ்வித்துள்ளது. இத்தகைய விருது எந்த மாநிலத்திலும் இல்லை, எந்த மாநில அரசும் செய்ததும் இல்லை.
”இலக்கியங்களுக்கு எல்லை இல்லை; அவை நம்மை இணைக்கும் பாலங்கள்”என்பதை தனது செயலால் மெய்ப்பித்துக் காட்டி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
”ஒன்றிய அரசின் அரசியல் குறுக்கீடுகளால், குறுகிய நோக்கத்தால் இந்தஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படாமல் உள்ளது. எனவே, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, இனி தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் 'செம்மொழி இலக்கிய விருது' வழங்கும். முதல் கட்டமாக ஒன்பது மொழிகளுக்கு வழங்கும். தேர்வுக்குழு அமைக்கும். பரிசின்புரவலராக தமிழ்நாடு அரசு இருக்கும்” என்று அறிவித்துள்ளார் முதலமைச்சர்.
இது ஒன்றிய பா.ஜ.க. அரசின் தலையில் விழுந்திருக்கும் இரட்டை அடியாகும். சாகித்ய அகாடமி விருதை நிறுத்தி வைத்துள்ள ஒன்றிய அரசை அம்பலப்படுத்தியது முதல் அடி என்றால், பல்வேறு மொழிகளுக்கு நாங்களே விருது வழங்கிக் கொள்கிறோம் என்பது இரண்டாவது அடி ஆகும்.
சாகித்ய அகாடமி, லலித் கலா அகாடமி, நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா, சங்கீத் நாடக அகாடமி போன்ற அமைப்புகள் இனி தன்னாட்சி அதிகாரத்தோடு இயங்க முடியாது என்ற பாசிச முடிவை பா.ஜ.க. அரசு எடுத்துள்ளது. இது கலைத்துறைக்கும், கலைஞர்களுக்கும் செய்யப்பட்ட மாபெரும் நெருக்கடி ஆகும். இந்த அமைப்புகள் சார்பில் இனி யாரையும் தேர்வு செய்து விருதுகள் வழங்க முடியாது. இவர்கள் தேர்வு செய்து பா.ஜ.க. அரசுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அவரை ஏற்றுக் கொண்டால்தான் அறிவிக்க முடியும். அவர்களுக்குப் பிடிக்காத, அவர்களது பாசிச, மதவாத, வகுப்புவாத, எதேச்சதிகார, கார்ப்பரேட் அரசியலை எதிர்ப்பவராக இருந்தால், ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தால் அவருக்கு விருது தரக்கூடாது என்பார்கள். விருதைத் தர முடியாது.
2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை அறிவிக்காமல் வைத்துள்ளார்கள். 2025ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்கான எழுத்தாளர்களைத் தேர்வு செய்ய அதன் நிர்வாகக் குழுக் கூட்டம் டெல்லியில் டிசம்பர் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் விருதுக்கான எழுத்தாளர்கள் யார் என்பது விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்- பட்டது.
இதையடுத்து டெல்லியில் அன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் சாகித்ய அகாடமி விருது விவரங்கள் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலரும் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தார்கள். எதிர்ப்பைப் பற்றி எல்லாம் பாசிச பா.ஜ.க. கண்டுகொள்ளுமா?
2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் தமிழில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது, 'தமிழ் சிறுகதைகளின் தடங்கல்' நூலுக்காக தேர்வு செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டுப் படைப்பாளி இவர். தமிழில் தவிர்க்க முடியாத படைப்பாளி இவர். முற்போக்குப் படைப்பாளி இவர். இவரை ஏற்குமா பா.ஜ.க. அரசு? இவருக்கு அங்கீகாரம் கொடுக்க விரும்புமா பா.ஜ.க. அரசு? அதனால் நிறுத்தி விட்டார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் ரவிக்குமார், தமது எக்ஸ் பக்கத்தில், “இனிமேல் பா.ஜ.க.காரர்களுக்கு மட்டும் தான் சாகித்ய அகாடமி விருதா? பா.ஜ.க.வில் சாகித்ய அகாடமி விருதாளர்கள் அணி உருவாக்கப்படுகிறதா?” என கேள்வி எழுப்பி இருந்தார். அதுதான் உண்மை ஆகி இருக்கிறது இறுதியில்!
இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. நாட்டின் அதிகாரப்பூர்வமாக 24 மொழிகளில் இருந்து கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய ஆய்வுப்படைப்புகளுக்காக எழுத்தாளர்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனைத்தான் நிறுத்தி வைத்து இருக்கிறது பா.ஜ.க. அரசு. இது அவர்களுக்குப் புதிதல்ல.
வரலாற்றுப் பாடங்களை நீக்குவதையும், இருட்டடிப்புச் செய்வதையும், இந்துத்துவக் கருத்துகளைத் திணிப்பதையும் அரசு அமைத்தது முதல் பா.ஜ.க. செய்து வருகிறது. சி.பி.எஸ்.இ. 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்தில் சேர்த்தும், மறைத்தும், வெட்டியும், ஒட்டியும் அவர்கள் செய்த செயல்களை பத்து ஆண்டுகளாகப் பார்த்தே வருகிறோம்.
இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டை நிலைநிறுத்தவும், ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே மொழி எனும் 'இந்து ராஷ்டிரா' கொள்கைக்கு வலு சேர்க்கவும், வரலாற்று உண்மைகளை மறைத்தும், திரித்தும் பள்ளிப் பாடங்களை மாற்றி வருகிறார்கள். வரலாற்று ஆசிரியர்களை, எழுத்தாளர்களை அச்சுறுத்தி வருகிறார்கள்.
இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டை நிலைநிறுத்தவும், ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே மொழி எனும் 'இந்து ராஷ்டிரா' கொள்கைக்கு வலு சேர்க்கவும், வரலாற்று உண்மைகளை மறைத்தும், திரித்தும் பள்ளிப் பாடங்களை மாற்றி வருகிறார்கள். வரலாற்று ஆசிரியர்களை, எழுத்தாளர்களை அச்சுறுத்தி வருகிறார்கள். வரலாற்று மறைப்பு, வரலாற்றுத் திரிபு, வரலாற்றுத் திணிப்பு - ஆகியவை பல நிலைகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் சாகித்ய அகாடமி அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. இது தமிழ் மட்டுமே எதிர்கொள்ளும் நெருக்கடி அல்ல. அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகும். இந்தி - சமஸ்கிருத வல்லாதிக்கத்தை உருவாக்க நினைக்கும் பா.ஜ.க.வின் மொழி அழிப்பு பயங்கரவாத நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டும்.
இத்தகைய சூழலில் அனைத்து தேசிய மொழிகளையும் காக்கும் நடவடிக்கையைத்தான் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்துள்ளார்கள். எழுத்தை, எழுத்தாளர்களை, இலக்கியத்தை, இலக்கியவாதிகளைக் காக்கும் அரசாக தனது ‘திராவிட மாடல்' அரசை அவர் நடத்தி வருகிறார்கள்.
இதுவரை தமிழ் இலக்கியங்களைக் காத்த முதலமைச்சர் அவர்கள், இப்போது இந்திய இலக்கியங்களையும் காக்கும் முதலமைச்சராக ஆகி இருக்கிறார். இந்தச் செயலிலும் அவரே முதல்வராக இருக்கிறார்.
Also Read
-
“திசை காட்டி விட்டது திருச்சி! எதிரிகள் எழ முடியாத அளவுக்கு வெல்வோம்!” : முரசொலி தலையங்கம்!
-
பழைய நிலங்களின் வீட்டுப் பட்டா குறித்து வந்த குட் நியூஸ்... அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
-
உங்கள் எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி! 300 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை:துணை முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!
-
ரூ.78.41 கோடி... 13 மாவட்டங்களில் 26 முடிவுற்ற திட்டப்பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர் !