murasoli thalayangam
மக்களுக்கு வழங்கிய உரிமையை கிழித்தெறிந்திருக்கிறது தேர்தல் ஆணையம் : சுதந்திர தினத்தில் முரசொலி எச்சரிக்கை
முரசொலி தலையங்கம் (15/08/2025)
79 ஆவது ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி !
இந்திய நாடு தனது 79 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. இது சாதாரணமாகக் கிடைத்த சுதந்திரம் அல்ல. போராடிப் பெற்ற சுதந்திரம் ஆகும். ஓராண்டு, ஈராண்டுப் போராட்டம் அல்ல. இருநூறு ஆண்டுகள் போராடியதால் கிடைத்த சுதந்திரம் ஆகும். அனைவரும் போராடியதால் கிடைத்தது இந்த சுதந்திரம். இதனை அனைவருக்குமானதாகப் பயன்படுத்துவதில்தான் சுதந்திரத்தின் பொருளும், இந்திய நாட்டின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.
“இந்திய மக்களாகிய நாம், ஒரு இறையாண்மை மிக்க, சமதர்மம் சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு அமைக்கவும் –
அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி கிடைக்கவும்–
சிந்தனையில், சிந்தனையை வெளிப்படுத்துவதில்,நம்பிக்கையில், பற்றுறுதியில், மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும் –
தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும் உறுதியாக அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் –
தனி ஒருவரின் மாண்புக்கும், சகோதரத்துவத்தை அனைவரிடத்தில் வளர்க்கவும் –
நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உறுதியளிக்கும் விழுமிய முறைமையுள்ள உறுதி பூண்டு – 1949 நவம்பர் 26 ஆம் நாளாகிய இன்று நம்முடைய அரசமைப்பு நிர்ணய சபையில் ஏற்று சட்டமாகவே இயற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்” –என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பு.
இந்த முகப்பை திரும்பத் திரும்ப வாசிக்கும் போது திரும்பத் திரும்பச் சொல்லப்படுவது அரசியல் பண்பாடுகளே தவிர வேறல்ல. ஒரு ஆட்சியானது நேர்மையாக, உண்மையாக, நீதியோடு எப்படி நடைபெற வேண்டும் என்பதைத்தான் தனது ஆட்சியியல், அரசியல் இலக்கணமாக இந்திய அரசமைப்புச் சட்டமானது கொண்டுள்ளது.
இந்த முகப்புரையைத்தான் ‘அரசமைப்புச் சட்டத்தின் இதயம்’ என்று சொல்வார்கள். இதற்கு விளக்கம் அளித்த இந்திய நாட்டின் முதல் தலைமை அமைச்சர் பண்டித ஜவஹர்லால் நேரு, ‘மக்கள்தான் அதிகாரத்தின் தோற்றுவாய் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை கூறுகிறது’ என்று சொன்னார். அதாவது, இந்திய நாடு எத்தகைய நோக்கம் கொண்டது, எப்படிச் செயல்பட வேண்டும், எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை விளக்குவதுதான் இந்த முகவுரை.
இதில் இருந்து வழுவும் போதெல்லாம், ‘அது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரைதானே தவிர, சட்டமல்ல’ என்று சிலரால் விளக்கம் அளிக்கப்பட்டது. கேசவானந்த பாரதி– கேரள அரசுக்குமான வழக்கில் (1973) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “அரசமைப்பின் முகப்பும், அரசமைப்பின் ஒரு பகுதியே” என்பதை உறுதி செய்தது. அரசமைப்புச் சட்டத்தின் உட்பிரிவுகளில் குழப்பம் ஏற்படும் போது, அதனைத் தெளிவுபடுத்தவும் இந்த முகப்புரை பயன்பட்டு வருகிறது.
இந்திய நாடு, அதன் குடிமக்களுக்கு நீதியை வழங்கும் என்பது தான் இதன் உள்ளடக்கம் ஆகும். சமத்துவம், மதச்சார்பற்ற தன்மை, அனைத்து விதமான சுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை, பத்திரிக்கைச் சுதந்திரம், சுதந்திரமான தேர்தல்கள் ஆகிய அனைத்தும் இதன் உள்ளடக்கம் ஆகும்.
இந்திய அரசமைப்பானது பிரிட்டனின் நாடாளுமன்ற அரசாங்க முறையை ஏற்றுக் கொண்டது. ஒருவருக்கு ஒரு வாக்கு உரிமை தரப்பட்டது. வயது வந்த இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் சம வாக்குரிமை அளிக்கப்பட்டது. முன்னேறிய மேலை நாடுகளில்கூட அனைவருக்கும் வாக்குரிமை என்பது அளிக்கப்படவில்லை. படிப்படியாகத் தான் அளிக்கப்பட்டது. இங்குதான் 21 வயது நிரம்பியவருக்கு வாக்குரிமை தரப்பட்டது. அதுவும் 18 வயதாக 1988 ஆம் ஆண்டு குறைக்கப்பட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சிதான், இந்திய அரசமைப்பின் குணம் ஆகும். இத்தகைய மக்களாட்சியை உருவாக்க வேண்டிய கடமையை தேர்தல் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. தனித்த அதிகாரங்கள் பொருந்திய அமைப்பு இது. ஆனால் இன்றைய தினம் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரியதாக மாறி இருக்கின்றன. ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வின் தொங்கு சதையாக மாறி, சர்ச்சையில் சிக்கி இருக்கிறது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையர்கள் தேர்வில் பல்வேறு திருகு வேலைகளை பா.ஜ.க. அரசு செய்தது. தேர்தலில் பல்வேறு திருகு வேலைகளை தேர்தல் ஆணையர்கள் செய்கிறார்கள். பா.ஜ.க.வைக் காப்பாற்றுவதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பலியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவில் முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு கேரளாவின் வடக்கு பரவூர் சட்டசபை இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்டது. 2004 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இந்தியா முழுவதும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது. ஒரு நவீன முறையையும் தனது சதிக்கருவிகளாகப் பா.ஜ.க. பயன்படுத்தப் பார்க்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் முழுமையான, சுத்தமான ஒரு வாக்காளர் பட்டியலைக் கூட தயாரிக்க முடியாத நிலைமையில்தான் தேர்தல் ஆணையம் இருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் அனைத்துச் சீரழிவுகளையும் கிழித்துத் தொங்கவிட்டுள்ளார். அவரது குற்றச்சாட்டில் ஒன்று கூட தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்படவில்லை. மக்களாட்சி மாண்புக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் நெருக்கடி இது.
பீகாரில் ஒரே நேரத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். இறந்துவிட்டதாகச் சொல்லி நீக்கப்பட்ட வாக்காளர்களைக் கூட்டி வைத்து டீ சாப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி. இதை விடக் கேவலம் இருக்க முடியுமா? இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கிய உரிமையைக் கிழித்தெறிந்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
இந்தியா தனது 79 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்நாளில் மக்களாட்சித் தத்துவம், பா.ஜ.க.வால் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. மக்களாட்சியைக் காக்க தொடர்ந்து போராடுவோம்.
Also Read
-
”போலி வாக்குகள் என்ற ‘பூஸ்டர் டோஸ்' மூலம் வெற்றி பெற்ற பிரதமர் மோடி” : பவன் கேரா குற்றச்சாட்டு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி சொன்ன தூய்மைப் பணியாளர்கள் : புதிய அறிவிப்புகளுக்கு வரவேற்பு!
-
”ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம் - விடுதலைத் திருநாள் போற்றிடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி
-
சுதந்திர தினத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அது என்ன?
-
”ஒன்றுபட்ட வலிமையே நாட்டின் வல்லமை” : சுதந்திரத் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!