murasoli thalayangam
“முதலில் பாஜகவிடம் அடமானம் வைத்த அதிமுகவை மீட்கட்டும்.. பிறகு...” - பழனிசாமி மீது முரசொலி தாக்கு!
முரசொலி தலையங்கம்
01.07.2025
முதலில் உங்கள் கட்சியை மீட்கவும்!
“தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கப் போகிறேன்” என்று கிளம்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. முதலில் அவர் பா.ஜ.க.விடம் அடமானம் வைக்கப்பட்ட அதிமுகவை மீட்கட்டும். அதன் பிறகு தமிழ்நாட்டை மீட்கலாம்.
தான் பதவி வகித்த காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பா.ஜ.க. தலைமையிடம் அடமானம் வைத்தவர்தான் இந்த பழனிசாமி. அவர்தான் வந்து வாய்கிழியப் பேசுகிறார்.
‘நீட் தேர்வை எழுதித்தாங்க ஆகணும்' என்று சொன்னது எந்த வாய்? பழனிசாமியின் வாய்தான். குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்க உத்தரவிட்டது யார்? இதே பழனிசாமி தான். மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்தது யார்? அதே பழனிசாமிதான். காவிரிப் பிரச்சினைக்காக கண்காணிப்பு ஆணையம் அமைக்கலாம் என்று சொன்னதற்கு மாறாக ஜல் சக்தி துறையிடம் அது ஒரு குழுவாக பா.ஜ.க. அரசு ஆக்கியபோது வாய்மூடி, கண்மூடிக் கிடந்து துரோகம் செய்தது யார்? இதே பழனிசாமிதான். தமிழ்நாட்டின் நிதிக்காக போராடினாரா? இல்லை. தமிழ்நாட்டின் நீதிக்காகப் போராடினாரா? இல்லை. தமிழ்நாட்டின் திட்டங்களுக்காகப் போராடினாரா? இல்லை. எதுவும் செய்யவில்லை. சும்மா, 'மிக்சர்' சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.
தன்னிடம் இருக்கும் முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, பா.ஜ.க. தலைமை சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தார் பழனிசாமி. என்னை இந்த நாற்காலியில் உட்கார வைத்திருந்தால் போதும் என்று நினைத்தார். அவரதுஅரசியல் அவ்வளவுதான். தமிழ்நாட்டைப் பற்றியோ, தமிழ்நாட்டின்உரிமையைப் பற்றியோ அவருக்கு எந்தக் கவலையும் அப்போதும் கிடையாது. இப்போதும் கிடையாது. எப்போதும் கிடையாது.
‘உனது பதவியைக் காப்பாற்றிக் கொடுத்த எங்களுக்கு கைமாறு செய்' என்று கேட்கிறது பா.ஜ.க. பன்னீர்செல்வம் இல்லாத, தினகரன் இல்லாத, சசிகலா இல்லாத கூட்டணி வேண்டும் என்கிறார் பழனிசாமி. ஏனென்றால் மீண்டும் போய், சசிகலா காலில் விழ முடியாது என்று நினைக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பா.ஜ.க. வின் கொத்தடிமைகளாக பல்வேறு வழிகளில் மாற்றப்பட்டவர்கள் இவர்கள். இவர்களைக் கைவிட்டு விடக் கூடாது என்று பா.ஜ.க. நினைக்கிறது. இந்த நிலையில்தான் பா.ஜ.க. தனக்குத் தெரிந்த ஒரே வழியான, 'ரெய்டு' மூலமாக பழனிசாமியை மிரட்டியது. 'பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி இல்லை' என்று சொல்லி வந்த பழனிசாமி, பா.ஜ.க.வின் காலடியில் பதுங்கினார். கூட்டணிக்கு உடன்பட்டார்.
அந்த கூட்டணி அறிவிப்பையாவது பழனிசாமி செய்தாரா?இல்லை. இதனை அமித்ஷா அறிவித்த மேடையிலாவது, பழனிசாமிக்குபேச அனுமதி கிடைத்ததா? இல்லை. அறிவித்தார் அமித்ஷா. அவ்வளவுதான். பழனிசாமியின் கதை அத்தோடு முடிக்கப்பட்டது.
அது முதல் அமித்ஷா பேசுவது, 'தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி' என்பதுதான். 'பழனிசாமிதான் அடமானம் வைத்துவிட்டாரே? அதன்பிறகு அவரிடம் என்ன கேட்க வேண்டும்?' என்று நினைக்கிறார் அமித்ஷா. ஆனால் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள பழனிசாமிக்கு வெட்கமாக இருக்கிறது.
அமித்ஷா மிக எச்சரிக்கையாகவே சொல்லி இருக்கிறார். 'பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும், முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார்' என்று சொல்லி இருக்கிறார். பழனிசாமி பேரைச் சொல்லவில்லை. ஏனென்றால், பழனிசாமி இல்லாத வேறொருவரை பா.ஜ.க. தயார் செய்துவிட்டது பா.ஜ.க. இது ஊரறிந்த ரகசியம்தான் அது எஸ்.பி. வேலுமணியாக இருக்கலாம். கோவை வந்த அமித்ஷா தான் கலந்து கொண்ட விழாவில் தனக்குப் பக்கத்தில் எஸ்.பி.வேலுமணியைத்தான் வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்னால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்ட விழாவிலும் எஸ்.பி.வேலுமணிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ‘அ.தி.மு.க.வில் இருந்து ஒருவர்' என்று அமித்ஷா சொல்லும் பின்னணி இதுதான்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு வெங்கையா நாயுடுவை தமிழ்நாட்டுக்காகத் தயார் செய்தது பா.ஜ.க. அது கைகூடவில்லை என்றதும், நிர்மலா சீதாராமனை தயார் செய்தார்கள். அவரும் மயிலாப்பூரில் காய்கறி வாங்கினார். மாம்பலத்தில் நடந்து பார்த்தார். தூத்துக்குடியில் மக்களைச் சந்தித்தார். மக்கள் திரும்பிப் பார்க்கவில்லை. அதனால் அவரையும் டெல்லிக்கே வைத்துக் கொண்டார்கள். அண்ணாமலை வாயைக் கொடுத்தும் மாட்டிக் கொண்டார். 'கையைக்' கொடுத்தும் மாட்டிக் கொண்டார்.
எனவே பா.ஜ.க. முகம் எதுவும் டெபாசிட் வாங்கக் கூடத் தேறாது என்பதை அமித்ஷா அறிவார். இறுதியாக பழனிசாமியைப் பயமுறுத்தி அ.தி.மு.க.வை அபகரித்துவிட்டார்கள். பழனிசாமிக்கும் 'மாற்றுத் தலைவர்' உருவாக்கிவிட்டார்கள். ‘முதலமைச்சர் யார் என்பதை பா.ஜ.க. நாடாளுமன்றக் கமிட்டிதான் முடிவு செய்யும்' என்று எச்.ராஜா சொன்னதை விட பழனி சாமிக்கு கேவலம் வேண்டுமா? மானஸ்தர் இதனைத் தாங்கிக் கொள்வாரா? ' ஒரே ஒரு ஆண்டுக்கு கட்சித் தலைவராக இருங்கள்' என்று வாய்ப்பளிக்கப்படாத ராஜா சொல்கிறார் பழனிசாமிக்கு பதில். இதனை விட அவமானம் வேண்டுமா? அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சியையே, பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் கமிட்டியோடு இணைத்து விட்டார்கள். விழிபிதுங்கிக் கிடக்கிறார் பழனிசாமி.
இத்தகைய கேவலமான சூழலை மறைக்கத்தான், 'தமிழ்நாட்டு உரிமைகளை மீட்கப் போகிறேன்' என்கிறார் பழனிசாமி. அவருக்கும் இன்னும் பத்து மாதம் பொழுது போக வேண்டாமா?
Also Read
-
“தடித்த தோலுக்கு ‘மன்னிப்பின்’ மகத்துவம் தெரியுமா?” - பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி கட்டுரை!
-
“இதுதான் உண்மையான சமநீதி - சமூகநீதி” : ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் குறித்து முரசொலி தலையங்கத்தில் புகழாரம்!
-
"இளைஞர் அஜித்குமார் விவகாரத்தில் சாத்தான் வேதம் ஓதும் பழனிசாமி" : ஆர்.எஸ். பாரதி பதிலடி!
-
திமுக சார்பில் அஜித்குமார் தாயாரிடம் ரூ.5 லட்சம் நிதி வழங்கிய அமைச்சர்: வீட்டுமனை பட்டா - பணி நியமன ஆணை!
-
”ChatGPT-யை முழுமையாக நம்ப வேண்டாம்” : பயனர்களுக்கு OpenAI தலைவர் சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை!