murasoli thalayangam
“நிதி இல்லை என்று பஞ்சப்பாட்டு பாடாமல், நெஞ்சுயர்த்தி நிற்கிறார் நமது முதல்வர்” - முரசொலி பாராட்டு !
தாயுமானவரான தமிழ்ப்புதல்வன்
‘எல்லார்க்கும் எல்லாம்' என்பதை தனது ஆட்சியின் இலக்காகவும் இலக்கணமாகவும் கொண்டு செயல்பட்டு வரும் திராவிட மாடல் முதலமைச்சரின் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை என்பது, 'அனைவருக்குமான அறிக்கையாக அமைந்திருக்கிறது.
‘என்ன இல்லை இதில்?' என்று சொல்லத் தக்கதாக அமைந்துள்ளது. 'எந்தத் துறை இல்லை இதில்?' என்று கேட்கத் தக்கதாக அமைந்துள்ளது. ‘எந்த தரப்பு தான் இல்லை இதில்?' என்ற கேள்விக்கான முழுமையான பதிலாக அமைந்துள்ளது இந்த அறிக்கை. பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப் போல, ‘இந்த நிதி நிலை அறிக்கையில் எங்கள் இதயம் இருக்கிறது' என்று சொல்லத் தக்க வகையில் 2824--25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தயாரித்து நேற்றைய தினம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் நிதித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள்.
* குடிசை இல்லாத் தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக 6 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டும் கலைஞரின் கனவு இல்லம்.
* வறுமை இல்லாத் தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக 5 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் தாயுமானவர் திட்டம்.
* அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு 1990 ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன்.
* ஒரு லட்சம் கல்லூரி மாணவர்க்கு கல்விக் கடன்.
* வடசென்னையின் மேம்பாட்டுக்கு 1866 கோடி.
* பழங்குடியினர் வாழ்விட மேம்பாட்டுக்கு 1983 கோடி.
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 35 ஆயிரம் கோடி கடன்.
* 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும்.
* அடுத்த இரண்டு ஆண்டுகளில் 58 ஆயிரம் பேருக்கு அரசுப் பணிகள்.
* 28 கோடியில் கைவினைஞர்கள் மேம்பாட்டுத் திட்டம்
* 1999 ஆண்டு பழமையான கோவில்கள் புதுப்பிப்பு
* ஆதி திராவிட இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் கடன் திட்டம்.
* அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்
* கடலோர வளங்கள் மீட்பு
* கடற்கரைகள் மேம்பாடு.
- இப்படி அனைத்து வகையினரையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது நிதி நிலை அறிக்கை.
அனைத்து ஊர்களுக்கும் நகரங்களுக்கும் உள்ளடக்கியதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது. திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள். கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, வடசென்னைக்கு வளர்ச்சி திட்டங்கள். சென்னை பிராட்வே பேருந்து நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நகர்ப்புற சதுக்கம். பூவிருந்தவல்லியில் திரைப்பட நகரம். சென்னையில் ஆட்டிசம் பாதிக்கப்பட்டோருக்கான மையம். கீழடியில் அருங்காட்சியகம். கோவையில் நூலகம், அறிவியல் மையம்.
தூத்துக்குடியில் விண்வெளி தொழில், உந்து சக்தி பூங்கா. கோவை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் ஆயத்த தொழில் பூங்காக்கள். முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம். கரூர், ஈரோடு, விருதுநகரில் சிறு ஜவுளி பூங்காக்கள். சென்னையில் கைவினைப் பொருட்கள் வணிக வளாகம். திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோவில்களில் ரோப் கார்கள். மெரினா, கடலூர், மரக்காணம், காமேஸ்வரம், கட்டுமாவடி, அரிய- மான், காயல் பட்டினம், கோடாவிளை கடற்கரைகள் மேம்பாடு. சென்னை மெட்ரோ ரயிலுக்கு 12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.கல்லணைக் கால்வாய் மேம்பாடு. தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள். மதுரை, திருச்சியில் டைடல் பூங்காக்கள். தஞ்சையில் சிப்காட் தொழில் பூங்கா. இப்படி தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களையும் உள்ளடக்கியதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
தமிழ்நாட்டை எந்த நிலைமையில் அ.தி.மு.க. ஆட்சி வைத்து விட்டுப் போனது என்பதை அனைவரும் அறிவார்கள். கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படி நடத்துகிறது என்பதையும் மக்கள் அனைவரும் அறிவார்கள். நிதியைச் சூறையாடி விட்டுப் போனது அ.தி.மு.க. நிதி மூலதன வருவாய் பாதையை அடைத்து விட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இத்தகைய நெருக்கடி நிலையில்தான் இத்தகைய மேன்மையான நிதிநிலை அறிக்கை வெளியாகி இருக்கிறது.
நிதி இல்லை - நிதி வரவில்லை என்ற ‘பஞ்சப் பாட்டை' பாடிக் கொண்டு இருக்காமல், நெஞ்சுயர்த்தி நிற்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். நம்முடைய வளங்களின் மூலமாக, அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன்களின் மூலமாக எல்லார்க்குமான நிதிநிலை அறிக்கையை தயாரித்து வழங்கி விட்டார் நிதித் துறை அமைச்சர் அவர்கள்.
சமூகநீதி கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு உலகை வெல்லும் இளைய தமிழகம் - அறிவுசார் பொருளாதாரம் - சமத்துவ நோக்கில் மகளிர் நலம் - பசுமை வழிப் பயணம் - தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளைக் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. இலக்கு, செயலைத் தீர்மானிக்கும். இலக்கு, பயணத்தை தீர்மானிக்கும். இலக்கு, அதற்குத் தேவையானதை தகவமைத்துக் கொள்ளும். அந்த வகையில் இந்த ஏழு இலக்குகளும், அதற்குத் தேவையானதை தகவமைத்துக் கொள்ளும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
'செய்க பொருளை' என்கிறான் வள்ளுவன். செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில் - என்கிறார் வள்ளுவர்.
பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருள்தான் என்கிறார் அறம் பாடிய வள்ளுவர். தாயுமானவராய் மாறிய தமிழ்ப்புதல்வன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதனைத் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு இயலாக மாற்றிச் செய்து வருகிறார்.
- முரசொலி தலையங்கம்
21.02.2024
Also Read
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”