murasoli thalayangam

“மோடியின் சர்வாதிகார நடைமுறை; தலைநகர் டெல்லியை நாசம் செய்யும் ஒன்றிய பாஜக அரசு”: முரசொலி கடும் விமர்சனம்!

தலைநகரை நாசம் செய்ய வேண்டாம்!

இந்தியாவின் தலைநகரம் டெல்லி. யூனியன் பிரதேசமாக அது அமைந்திருக்கிறது. ஆட்சி செய்வது ஆம் ஆத்மி கட்சி. முதலமைச்சராக இருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். 2014 ஆம் ஆண்டு முதலமைச்சராக அவர் அமர்ந்தார். பா.ஜ.க.வும் ஒன்றிய ஆட்சியில் அமர்ந்தது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல் அரவிந்த் கெஜ்ரிவாலை பழிவாங்குவதாக நினைத்து டெல்லி ஆட்சி நிர்வாகத்தையே நாசம் செய்து கொண்டு இருக்கிறார்கள். தொடர்ச்சியாக அந்த மாநில அரசின் முடிவுகளில் தலையிட்டு அவர்களைச் செயல்பட விடாமல் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி டெல்லியில் அமர்ந்துள்ளது. மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் எந்த முடிவும் எடுத்துவிடாமல் தடுக்கும் காரியத்தை துணை நிலை ஆளுநரை வைத்து பா.ஜ.க. பார்த்துக் கொண்டது. டெல்லி அமைச்சரவை எடுக்கும் முடிவை நிறைவேற்ற விடாமல் துணை நிலை ஆளுநர் தடை செய்து வந்தார். அதேபோல் அதிகாரிகளை ஆளுநரே நியமித்தார். மாற்றிக் கொண்டார். இது ஆட்சி நிர்வாகத்தில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு போக வேண்டிய அவசியம் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டது. 'ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநருக்குத்தான் டெல்லி நிர்வாகத்தில் அதிகாரம்' என்று டெல்லி உயர்நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற நீதிபதியும் இதனை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார். இதையடுத்து ஒன்றிய அரசின் அதிகாரத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதனை அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அண்மையில் வழங்கி இருந்தனர். நீதிபதிகளின் தீர்ப்பில், மாநில ஆட்சிக்கே அதிகாரம் உள்ளது, துணை நிலை ஆளுநருக்கு அல்ல என்று தீர்ப்பளித்தார்- 6İT.(CLD11,2023) "மக்கள் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்டமியற்றும் அதிகாரம் டெல்லி சட்டப்பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி என்பது அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். கூட்டாட்சி என்பது உயிர்வாழ்வதற்கான பல்வேறு நலன்களை உறுதி செய்கிறது மற்றும் தேவைகளுக்கு இடமளிக்கிறது.

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதன் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும், கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை என்றால் அந்த அரசுக்கு சட்டமன்றம் மற்றும் பொதுமக்கள் மீதான பொறுப்பு நீர்த்துப்போகும். எந்த ஒரு அதிகாரியும் அரசாங்கத்திற்கு கட்டுப்பட வேண்டிய தேவை இல்லையென்றால் கூட்டுப்பொறுப்பு என்பது இல்லாமல் போய்விடும்.

எந்த ஒரு அதிகாரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால்தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணரும்போது அவர்கள் அரசுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கலாம். அதிகாரிகள் அமைச்சர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய தேவையில்லை என்று நினைத்தால், அவர்களின் வழிகாட்டுதல்களை ஏற்க மறுத்தால் கூட்டுப்பொறுப்பின் கொள்கைகள் பாதிக்கப்படும்.

ஒன்றிய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் துணை நிலை ஆளுநர், சேவைகள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மற்றும் அதன் அமைச்சரவை குழுவின் ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டவர். குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ள நிர்வாக அதிகாரங்கள் துணைநிலை ஆளுநருக்கு உண்டு என்றாலும் அது ஒட்டுமொத்த டெல்லி அரசின் நிர்வாகத்தினை கட்டுப்படுத்தாது.

அப்படி இல்லையென்றால் டெல்லியை ஆளுவதற்கு தனியாக ஒரு நிர்வாக அமைப்பினைத் தேர்ந்தெடுத்ததற்கான அர்த்தம் இல்லாமல் போய்விடும்" - என்று தீர்ப்பளித்தது அரசியல் சாசன அமர்வு. 'அன்றாட நிர்வாகங்கள் அனைத்தையும் மேற்கொள்ள துணை நிலை ஆளுநரை விட முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படிதான் செயல்பட வேண்டும்.

அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்' என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இது ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமல்ல, மக்களால் தேர்ந் தெடுக்கப்படும் ஜனநாயக அமைப்புக்கே கிடைத்த வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. இந்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வை மதித்தார்களா என்றால் இல்லை. டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் அவசர சட்டத்தை இரவோடு இரவாக கொண்டு வந்துவிட்டார்கள். எங்களை எந்த உச்சநீதிமன்றமும் கட்டுப்படுத்த முடியாது என்பதைக் காட்டி விட்டார்கள்.

தேசியத் தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வைத்து பிறப்பித்து விட்டார்கள். தேசியத் தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டம் (1991)-ஐ திருத்தும் வகையிலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை நிராகரிக்கும் வகையிலும் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளது என ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து அதற்கு மறுநாளே, தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி ஒன்றிய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தீர்ப்பினை செல்லாததாக ஆக்கும் வகையில் தேசியத் தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசரச் சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

"உச்சநீதிமன்றம் பல ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரவு ஒன்றை பிறப்பித்து டெல்லி மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்தது. ஆனால், ஒன்றிய அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டு வந்து அதனை பறித்துவிட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கக்கூடாது என அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோர இருக்கிறேன்.

இந்தப் போராட்டமானது டெல்லி மக்களுக்கானது மட்டுமல்ல; இது இந்திய ஜனநாயகத்தையும், பாபாசாகேப் வழங்கிய அரசியல் சட்டத்தையும், நீதித்துறையையும், இந்த நாட்டையும் காப்பாற்றும் போராட்டம்; இதற்கு அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்" - என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லி இருக்கிறார். இதனை முன் வைத்து இந்தியத் தலைவர்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார் அவர்.

டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாக சேவைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்றும், அதன் முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும் அரசியல் சாசன அமர்வே தீர்ப்பளித்த பிறகும் மக்களாட்சி நெறிமுறைகளை நொறுக்கத் துடிக்கிறார்கள் என்றால் பா.ஜ.க.வின் சர்வாதிகார, எதேச்சதிகார நடைமுறைகளுக்கு எதற்காக நாடாளுமன்றக் கட்டடம்?

Also Read: “தனக்குத் தானே ஜனநாயகம் பற்றி வகுப்பெடுத்துக் கொண்ட பிரதமர் மோடி” : முதலை கண்ணீர் நாடகத்தை சாடிய முரசொலி!