murasoli thalayangam

“தனக்குத் தானே ஜனநாயகம் பற்றி வகுப்பெடுத்துக் கொண்ட பிரதமர் மோடி” : முதலை கண்ணீர் நாடகத்தை சாடிய முரசொலி!

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!

புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரையை அனைவரும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவர் அதிகப்படியாக ஜனநாயகம் பற்றியே பேசி இருக்கிறார்.

* இந்தியா ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்ல, இது ஜனநாயகத்தின் தாயும் கூட.

* இந்தியா இன்றைக்கு உலக ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்துள்ளது.

*ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல, இது ஒரு கலாச்சாரம். ஒரு எண்ணம், ஒரு பாரம்பர்யம்.

* நமது ஜனநாயகம், நமக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கிறது.

* நமது அரசியல் சாசனம், நமது உறுதிப்பாடு ஆகும்.

*நமது நாடாளுமன்றம் பிரதிநிதித்துவத்தின் வளமான கலாச்சாரத்தை நமக்கு அறிவிக்கிறது.

* இந்த நாடாளுமன்றக் கட்டடம் நமக்கு அளிக்கும் உத்வேகம் ஒன்றுதான், அது நாட்டு மக்களின் வளர்ச்சி.

* இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் சுதந்திரத்தின் நூற்றாண்டை நிறைவு செய்ய இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் நாம் இந்தியாவை ஒன்று சேர்ந்து வளர்ந்த நாடாக்குவோம்.

* இன்றைக்கு ஏழ்மையில் இருந்து இந்தியா விரைவாக விடுபட்டு வருகிறது.

* இந்த நாடாளுமன்றக் கட்டடத்தில் அமருகிற ஒவ்வொரு எம்.பி.யும் ஜனநாயகத்துக்கு புதிய உத்வேகத்துடன், புதிய இலக்கை வழங்க முயற்சிப்பார்கள்.

* இந்த புதிய நாடாளுமன்றம் புதிய ஆற்றலை, புதிய சக்தியை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு வழங்கும். - இவை எல்லாம் பிரதமர் அவர்கள் பேசியது ஆகும்.

ஜனநாயகம்... ஜனநாயகம்... ஜனநாயகம்... என்றே முழங்கி இருக்கிறார். இந்த உரைகள் யாருக்கு ஜனநாயகத்தை உணர்த்த வேண்டுமோ அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவருக்கே, அவரது பா.ஜ.க. கட்சிக்கே, அக்கட்சியின் தலைவர்களுக்கே ஜனநாயகத்தை உணர்த்தியாக வேண்டியதாக இருக்கிறது.

இதே நாடாளுமன்றத்தில் நாட்டின் மிக முக்கியப் பிரச்சினைகளுக்கு விவாதம் நடத்தப்படவில்லை. பிரதமரால் உரிய பதில்கள் தரப்பட்டது இல்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தன்மை என்பது என்ன?

அமெரிக்காவின் நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் 24.1.2023 அன்று வெளிட்ட அறிக்கையில் அதானி நிறுவனங்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. முழுக்க முழுக்க பா.ஜ.க. தலைமையுடன் ஐக்கியம் கொண்ட நிறுவனம் இது. இவரது அசுர தொழில் வளர்ச்சி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் கோரிக்கை வைத்தது. நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டார்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டதா? பிரதமர் அவர்கள் பதில் அளித்தார்களா? இல்லை.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இந்திய வம்சாவளி மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகம் பற்றி விமர்சித்து விட்டார் என்று சொல்லி அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திசை திருப்பி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தது பா.ஜ.க.

2015 ஆம் ஆண்டு மே மாதம் தென் கொரியா சென்றார் பிரதமர் மோடி. அப்போது, ''இந்தியாவில் ஏன் பிறந்தோம் என ஒரு காலத்தில் மக்கள் கவலைப்பட்டார்கள்' என்று பேசினார் . தென்கொரியாவில் உள்ள இந்திய சமூகத்தினரிடம் பேசும் போது, ''இதற்கு முன்பு என்ன பாவம் செய்தோம்?

இந்தியாவில் வந்து பிறந்துவிட்டோம் என கடந்த காலங்களில் மக்கள் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். இதனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. வெளிநாடுகளில் அதிக ஊதியத்துடன் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள்" என்று பேசினார்.

அப்படித்தான் ராகுல்காந்தியின் பேச்சும் அமைந்திருந்தது. ஆனால் இதை வைத்தே நாடாளுமன்றத்தில் தினமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது பா.ஜ.க. அதாவது, ராகுல் காந்தியைக் குற்றம் சாட்டுவதன் மூலமாக அதானி பிரச்சினையை பேசுவதை திசைதிருப்ப முயற்சித்தார்கள்.

மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வரும் போதும் மக்கள் கருத்து கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லை. ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் இரவுபகல், மழை வெயில் பாராமல் விவசாயிகள் போராடினார்கள். இறுதியாக சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருவதால் திரும்பப் பெற்றார்கள். திரும்பப் பெறும் போதும் நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லை.

ஒரு நாள் நள்ளிரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தார்கள். அதுவும் நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லை. உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்தினா இதனைக் கண்டித்தார். 'இது தொடர்பாக ஏன் சட்டம் நிறைவேற்றவில்லை?' என்று நீதிபதி கேட்டார். அவசர சட்டம் போட்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருந்தார் நீதிபதி.

நிர்வாக நடைமுறைப்படி பணமுடக்கம் மேற்கொண்டது தவறு என்றும் நாடாளுமன்றம் மூலம் சட்டம் இயற்றி அமல்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சொன்னார். இதற்கு முன்னால் இரண்டு முறை பணமதிப்பிழப்பு இந்தியாவில் நடந்துள்ளது. இரண்டு முறையும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார் நீதிபதி.

''நாடாளுமன்ற நடைமுறைப்படி பண முடக்கம் மேற்கொண்டிருந்தால்தான் அது ஜனநாயகத்துக்கு உட்பட்டதாக இருக்க முடியும். இதுபோன்ற முக்கிய முடிவுகள் எடுக்கும் போது நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது. மக்கள் பிரதிநிதிகள் முன் விவாதம் நடந்திருக்க வேண்டும்” என்பது நீதிபதி நாகரத்தினா எழுதிய வரிகள்.

ரிசர்வ் வங்கியின் சட்டப்பிரிவு 26(2) இன் படு பணமதிப்பு இழப்பு என்பது நாடாளுமன்றத்தால் மட்டுமே செய்ய முடியும் என்பதை நீதிபதி சுட்டிக் காட்டி இருக்கிறார். ஒன்றிய அரசுக்கு அளவுக்கு மீறிய அதிகாரம் இல்லை என்பதையும் any –- all ஆகிய இரண்டு சொற்களையும் வைத்து விளக்கி இருந்தார். இப்படி முக்கியமான அனைத்துப் பிரச்சினைக்கும் நாடாளு மன்றத்தையே பயன்படுத்தாதவர்தான் உணர்ச்சி பொங்க நாடாளுமன்றத்தின் கட்டடத்தை பார்த்து கண்ணீர் மல்கப் பேசி இருக்கிறார்.

தனக்குத் தானே ஜனநாயகம் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. தான் பேசியபடி தானும், தனது கட்சியும் நடந்து கொள்ள வேண்டும்.

- முரசொலி தலையங்கம்

Also Read: பாஜகவின் நாடகங்கள் தமிழ்நாட்டு மக்களால் ஒதுக்கித் தள்ளப்படும்,, தூக்கி வீசப்படும்! -முரசொலி விமர்சனம் !