murasoli thalayangam

இடைநிற்றல் மாணவர்களின் கைப்பிடித்து உயர்கல்விக்கு அழைத்து செல்லும் கல்வித் தந்தையே முதல்வர்: முரசொலி!

கல்வித் தந்தையே முதல்வர்!

பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை - கல்லூரியில் படிக்கும் இளைஞர்களை மட்டுமல்ல – படிக்க வராமல் இடையில் நின்று விடக் கூடியவர்களையும் பள்ளி – கல்லூரிகளுக்குள் அழைத்து வரும் முதலமைச்சராக இருக்கிறார் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதல் இலக்கு என்பது ‘அனைவர்க்கும் கல்வி’ என்பதாகும். அனைவர்க்கும் கல்வி - அனைவர்க்கும் உயர் கல்வி - அனைவர்க்கும் ஆராய்ச்சிக் கல்வி என்பதை இலக்காகக் கொண்டு பள்ளிக் கல்வித் துறையும் உயர் கல்வித் துறையும் செயல்பட்டு வருகின்றன. ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ முதல் ‘நான் முதல்வன்’ திட்டம் வரை அனைத்துமே தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களின் - இளைஞர்களின் முன்னேற்றத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீட்டப்படும் திட்டங்கள் ஆகும்.

இதில் பலரும் கவனிக்கத் தவறும் குறியீடுகளைக் கவனிப்பவராக முதலமைச்சர் அவர்கள் செயல்படுகிறார்கள். ‘’பள்ளிக்கு வந்தவர்களைப் படிக்க வைப்பது மட்டுமல்ல; ஒரு அரசின் நோக்கம். பள்ளிக்கு வர இயலாதவர்களையும் வர வைக்க வேண்டும் என்பதே எமது அரசின் நோக்கம் ஆகும்” என்ற சிந்தனையோடு முதலமைச்சர் ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதுதான், பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லாதவர்களுக்கான சிறப்பு முகாம்கள். அத்தகைய முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நேற்றைய தினம் நடந்துள்ளன.

கடந்த 2021-–2022 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களில் பலர் உயர்கல்விக்குச் சென்று விட்டனர். எனினும் சூழ்நிலை காரணமாக சில மாணவர்கள் இன்னமும் கல்லூரிகளுக்குச் செல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்காகவே தமிழ்நாட்டில் உயர்கல்விக்கான சிறப்பு முகாம்கள் இதுவரை இரண்டு முறை நடத்தப்பட்டிருக் கின்றன. மூன்றாவது முறையாக அக்டோபர் 28 அன்று நடந்துள்ளது. இந்த முகாம்களில் கல்லூரிச் சேர்க்கைக்காக முறையான வழிகாட்டுதலோடு ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. கண்முன் உள்ள பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொன்னதுடன் உயர்கல்வியின் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதுவரை கல்லூரியில் சேராத தங்கள் வகுப்பு நண்பர்களை அழைத்துக்கொண்டு வரும்படியும், அப்படி முடியாத பட்சத்தில் அவர்கள் குறித்த தகவல்களை பள்ளித் தலைமையாசிரியருக்கு அளிக்கும்படியும் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது அரசு. வழிகாட்டுதல் வேண்டி வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற முதன்மைப் பயிற்சியாளர்கள் / ஆசிரியர்கள் மூலம் அவரவர் பயின்ற பள்ளிகளில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களை பொதுமக்களும், மாணவர்களும் அறிய பல்வேறு குறும்படங்களையும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு பரப்புரை செய்துள்ளது. மாணவ சமுதாயத்தின் மீதான உண்மையான அக்கறையை இது வெளிப்படுத்துகிறது.

அரசுப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வெளியேறியதும்.. அவர்கள் என்ன செய்கிறார்கள்? - மேற்கொண்டு படிக்கிறார்களா இல்லையா?- எந்தக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள்?- தொழிற்கல்வி பயில்கிறார்களா? - கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்களா?- வேறு கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்களா? - அல்லது படிப்பைத் தொடர முடியாமல்.. உயர்கல்விக்குச் செல்லாமல் இருக்கிறார்களா என்பதை ஆய்வுநடத்த முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

ஆர்வம் இல்லை

வேலைக்குச் செல்ல வேண்டும்

குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்

மதிப்பெண் இல்லை

– என்பது போன்ற ஏதாவது ஒரு காரணத்தால் உயர்கல்வியைத் தொடர முடியாத சூழலுக்கு சில மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளது கவனத்துக்கு வந்தது. இவர்களின் ஒவ்வொருவரது காரணங்களையும் அறிந்து தீர்வு காண வேண்டியதை தனது கடமையாக அரசு எடுத்துக் கொண்டது. இதற்காக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த மையங்கள். கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த 8 ஆயிரத்து 249 மாணவர்கள் உயர்கல்வியில் சேரவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

எந்த ஒரு மாணவரும் உயர்கல்வியில் சேராமல் படிப்பை கைவிட்டுவிடக் கூடாது என்கிற நோக்கத்துடன் உயர்கல்வி வழிகாட்டி மையங்களை அரசு உருவாக்கியது. மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்தும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விழிப்புணர்வை உண்டாக்கி அவர்களை மீண்டும் படிக்கவும், ஒரு வேலையில் அமரும் வரை வழிகாட்டுவதை தனது பொறுப்பாக அரசு எடுத்துக் கொள்கிறது.

பணம் செலவழித்து படிக்க வைக்க இயலாத நிலையில் உள்ள மாணவர்களுக்காக கல்விக்கடனுக்கு ஏற்பாடு செய்வது,

Skill development பயிற்சிகளுக்குச் செல்ல ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அந்த வகுப்புகளில் சேர்வதற்கு உதவுவது,

உயர்கல்வியில் சேர்வதற்கான உதவிகளைச் செய்வது,

அவர்களில் யாருக்கேனும் உளவியல் ஆலோசனைகள் தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது உட்பட பல உதவிகளை அவர்களுக்குச் செய்வதற்காகவே இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இவை அனைத்தும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டம்தான் ‘நான் முதல்வன்’ திட்டம் ஆகும். தமிழ்நாடு இளைய சக்தி கல்வியில், அறிவாற்றலில், தனித்திறமைகளில் முன்னேறிச்செல்ல வழியமைக்கும் திட்டம் தான் ‘நான் முதல்வன்’ திட்டம் ஆகும். ‘’கல்வியே யாராலும் உங்களிடம் இருந்து பறிக்க முடியாத சொத்தாகும்” என்பதை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். அத்தகைய சொத்தை உருவாக்கித் தருவதில் முனைப்புடன் முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுகள்தான் இந்த முகாம்கள். அதாவது, உண்மையான கல்வித் தந்தையாகவே செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் அவர்கள்!

Also Read: “வெள்ளை இனத்தைச் சேராத ரிஷி சுனக் பிரதமர் பதவியில் ஆள வந்திருப்பது பெருமைக்குரியது தான்” - முரசொலி !