murasoli thalayangam

இதுதான் பழனிசாமியின் துரோக வரலாறு.. இதனால்தான் எந்த பதவியிலும் இல்லாமல் டம்மியாகக் கிடக்கிறார் !

'திமுக அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை' என்று தினமும் உளறிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திமுக கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது, ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்துச் சொல்வோம் என்பதுதான்.'ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணத்தையும் திமுக தான் கண்டுபிடிக்க வேண்டும், அந்த சாதனையையும் திமுக தான் செய்ய வேண்டும்' என்று விமர்சகர்களே சொன்னார்கள். தனது ஆட்சிக் காலத்தில் அதனைக் கூடச் செய்யாதவர் தான் பழனிசாமி.

பன்னீர்செல்வத்தை தன் பக்கம் இழுப்பதற்காக ஒப்புக்காக ஒரு ஆணையத்தை நியமித்து கணக்குக் காட்ட நினைத்தாரே தவிர, ஜெயலலிதா குறித்து உண்மையான அக்கறை பழனிசாமிக்கு இருந்தது இல்லை.ஜெயலலிதாவுக்காக ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தாதவர் தான் பழனிசாமி. 'அம்மா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர். அவர் வகித்த பதவியில் வேறு யாருக்கும் உட்காரத் தகுதி கிடையாது' என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் போட்ட பழனிசாமி, அதன் பிறகு 'தானே பொதுச்செயலாளர்' என்று தீர்மானம் போட்ட கொடுமையையும் தான் பார்த்தோமே! இதுதான் ஜெயலலிதா மீதான உண்மையான அவர்களது அக்கறை ஆகும்.

அதிகாரம் இருக்கும் வரை ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்ததும், சசிகலா அதிகாரம் தரும் இடத்தில் இருக்கும் போது அவரது காலை நோக்கி ஊர்ந்து சென்றதும், அவர் சிறைக்குப் போன பிறகு அவர் காலை வாரியதும், தனது பதவி நிலைக்க பன்னீர்செல்வத்தோடு சேர்ந்ததும், பதவி பறிபோய் இனி பன்னீர் தயவு தேவையில்லை என்றதும் அவரையே துரத்தத் துடிப்பதும் தான் பழனிசாமியின் துரோக வரலாறு. எனவே, அவருக்கு ஜெயலலிதாவைப் பற்றி இனி என்ன கவலை இருக்கக் போகிறது.

நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்தை முடுக்கிவிட்டு, நான்காண்டு காலத்தில் அறிக்கையைப் பெறுவதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் 'மிக்சர்' சாப்பிட்டுக் கொண்டு இருந்து விட்டார் பழனிசாமி. இதோ திமுக ஆட்சியில்தான் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் விலகத் தொடங்கி இருக்கிறது.

22.9.2016 அன்று அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜெயலலிதா. 5.12.2016 அன்று அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்தின் அறிக்கை 27.8.2022 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தரப்பட்டது. 29.8.2022 அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அதாவது அறிக்கை தரப்பட்ட இரண்டாவது நாளே அமைச்சரவை கூடி இது தொடர்பாக விவாதித்தது.

''விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திருமதி வி.கே. சசிகலா,சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஜி.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்டவல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர் அதற்கான விபர அறிக்கையுடன் ஆணையத்தின் அறிக்கையை சட்டப் பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது" - என்று தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது. முழு அறிக்கை வெளியான பிறகு தான் அனைத்து உண்மைகளையும் பொதுவெளியில் விவாதிக்க முடியும்.சட்டமன்றத்தில் அறிக்கை வைத்து முழுமையாக வெளிவந்த பிறகு தான் பழனிசாமி கூட்டத்தின் கையாலாகாத்தனமும் பல மர்மங்களும் வெட்ட வெளிச்சமாகும். திமுக அளித்த முக்கியமான வாக்குறுதியானது நிறைவேறும்.

இன்னொரு முக்கிய வாக்குறுதியான கொடநாடு - கொலை, கொள்ளை மர்மம் குறித்த விசாரணையும் சூடுபிடித்து வருகிறது. விசாரணை வளையம் சிலரை நோக்கி இறுகத் தொடங்கி இருக்கிறது. இதனால் தான் அதிமுகவின் முக்கியத் தலைகள் பதுங்கத் தொடங்கி இருக்கின்றன.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி சயன் என்பவர் ஊட்டி காவல்துறையில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். உடனேயே அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக் கொள்ளும் பழனிசாமி, 18 ஆம் தேதியே கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்குள் வந்தார். வெளிநடப்பு செய்கிறார். மறுநாள் ஆளுநர் மாளிகைக்கு ஓடுகிறார். பேட்டி என்ற பெயரால் ஏதேதோ 'சட்டம்' எல்லாம் பேசுகிறார்!

சயன் என்பவர் என்ன சொன்னார் என்பது அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை. அதற்குள் பழனிசாமி பதறியது ஏன்? 'கொடநாடு கொலை, கொள்ளையில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. எந்த விசாரணைக்கும் நான் தயார்' என்று பழனிசாமி சொல்லி இருந்தால் பாராட்டலாம். ஆனால் அவர் 'கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கூடாது' என்றார். '' சயன் வழக்கு முடியும் தருவாயில் உள்ளது. இதை மீண்டும் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். சயன் வாக்குமூலத்தில் என்னையும் இணைத்துள்ளார்கள். மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்கள். பழிவாங்க இதை ஜோடிக்கிறார்கள் '' என்று கோர்வையில்லாமல் ஏதோ சொன்னார்.

'இவர்கள் எத்தனை முறை விசாரித்தாலும் என்னைச் சிக்க வைக்க முடியாது. எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை' என்று தானே பழனிசாமி சொல்லி இருக்க வேண்டும்! அப்படி அவரால் சொல்ல முடியவில்லை. இப்படி கொடநாடு சம்பவமாக இருந்தாலும், ஜெயலலிதா மரண மர்மமாக இருந்தாலும் அனைத்திலும் மர்மங்களைக் கொண்ட ஆட்சியாகத்தான் அதிமுக ஆட்சி இருந்தது. 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்' என்றவர் பழனிசாமி. அவர் மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்கச் சொல்லி உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி விட்டது உச்சநீதிமன்றம். இப்படி மொத்தமாகச் சிக்கலில் மாட்டிக் கொண்ட பழனிசாமி. அதிமுகவுக்கு உள்ளும் எந்தப் பதவியிலும் இல்லாமல் டம்மியாகக் கிடக்கிறார். அதிமுகவின் சுற்று வட்டாரம் அனைத்தும் இற்று நொறுங்கிக் கொண்டு இருக்கிறது.

Also Read: கடத்தல் குழந்தையை வாங்கிய பா.ஜ.க பிரமுகர்..1.80 லட்சத்திற்கு பேரம் பேசிய கொடுமை.. உ.பியில் அதிர்ச்சி!