murasoli thalayangam

“கோட்சேக்களின் கூட்டத்தால் இந்தியாவுக்கு ஆபத்து”: ராம்நாத் கோவிந்த் விட்டுச்சென்ற செய்தி என்ன? - முரசொலி!

விடை பெற்றவர் விட்டுச் சென்ற செய்தி!

பதினான்காவது குடியரசுத் தலைவராக இருந்த மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் தனது பதவியில் இருந்து விடை பெற்றுச் செல்லும் போது ஆற்றிய உரை என்பது உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது ஆகும்.

* நாம் பயணிக்கும் ஜனநாயகப் பாதையை வரையறுத்தது அரசியல் நிர்ணயசபை. அந்தசபையில் இடம் பெற்றிருந்த ஒவ்வொருவரின் விலை மதிப்பற்ற பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட அரசமைப்பு நமக்கு கலங்கரை விளக்கமாக வழிகாட்டுகிறது.

* சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை கொள்கைகளாக அங்கீகரிக்கும் வாழ்க்கை முறைதான் சமூக ஜனநாயகம் என்று அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்றிருந்த சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கர் தெரிவித்தார்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தைத் தனித்தனியாகக் கருதக்கூடாது என்று கூறிய அவர், அவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழித்தால் அது ஜனநாயகத்தின் குறிக்கோளை வீழ்த்துவது ஆகும் என்றும் தெரிவித்தார்.

* நமது முன்னோர்களும் நமது நவீன தேசத்தை தோற்றுவித்தவர்களும் கடின உழைப்பு மற்றும் சேவை மனப்பான்மையுடன் நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.

* இந்த தேசம் குடிமக்களால் ஆனது.

* எனது சேவையில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் நான் மகாத்மா காந்தியை நினைவுகூர்வது வழக்கம். அவரின் வாழ்க்கையும், அவர் கற்பித்தவற்றையும் தினந்தோறும் சில நிமிடங்களாவது அனைவரும் நினைவுகூருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவை தான் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் விடை பெற்றுச் செல்லும் போது விட்டுச்சென்ற செய்திகள் ஆகும்.

ஜனநாயகம் என்பதை தனிச்சொல்லாக அவர் பயன்படுத்தவில்லை. சமூக ஜனநாயகம் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். அதுதான் முக்கியமானது. ஜனநாயகம் என்பது ஒரு சிலருக்கானதாக இருந்துவிடக்கூடாது. அனைவருக்கும் பொதுவான சமூக ஜனநாயகமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.

அவர் தனது உரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்று தத்துவங்களுக்கு மட்டுமே அதிகமான முக்கியத்துவம் தருகிறார். ஏனென்றால், இன்றைக்கு இவை தான் கேள்விக்குறியதாக மாறி இருக்கிறது என்பதை அவர் உணர்ந்துள்ளார். அது தான் அவரை இப்படி பேசவைக்கிறது.

சகோதரத்துவத்தை சிதைக்கும் காரியங்கள் இந்தியாவில் நடப்பதை இந்தியாவின் மிக உயர்ந்த பதவியில் உட்கார்ந்து இருந்து பார்க்கிறார் ராம்நாத் கோவிந்த் அவர்கள்.

ஒன்றுபட்ட இந்தியாவை 'ஒற்றை மதம் ஒற்றைச் சிந்தனை ஒற்றை மொழி' ஆகிய ஒற்றைத் தன்மைகள் சிதைத்துவிடும் என்பதை அவர் உணர்கிறார். அதனால் தான் சகோதரத்துவத்துக்கும், சமத்துவத்துக்கும், சுதந்திரத்துக்கும் அழுத்தம் தருகிறார்.

'இந்த மூன்றையும் தனித்தனியாக பார்க்கக் கூடாது' என்ற டாக்டர் அம்பேத்கரின் கூற்று செறிவானது ஆகும். வளர்ச்சி' என்று பா.ஜ.க. சொல்கிறது. வளர்ச்சி என்றால் அது தனிப்பட்ட தொழில் வளர்ச்சியாக மட்டும் சொல்கிறது. தொழிற்சாலைகள் வளர்வதால் நாடு வளர்ந்துவிடாது. சில தொழிலதிபர்கள் உருவாவார்கள்.

எனவே, மொண்ணையாக 'டெவலப்மெண்ட்' என்று பேசமுடியாது. அனைத்திலுமான வளர்ச்சியாக அது இருக்க வேண்டும். 'சமூக வளர்ச்சி' என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திராவிட மாடல்' வளர்ச்சியை வரையறுத்துச் சொல்லி இருக்கிறார். அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இதனைத்தான் 'சமூக ஜனநாயகம்' என்ற சொற்களால் சொல்கிறார் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள். இந்த தேசம் குடிமக்களால் ஆனது. இவர்களுக்கு சமூக ஜனநாயகம் தேவை என்பதை அவர் அழுத்திச் சொல்வது அதனால் தான்.

இறுதியாகச் சொன்னது தான் துணிச்சலானது. 'நான் காந்தியை நினைவு கூர்வேன், நீங்களும் நினைவுகூருங்கள்' என்பது ஆகும். 'கோட்சேவுக்கு சிலைவைக்க வேண்டும்' என்று குரல்கள் எழும்பி வரும் காலத்தில் காந்தியை நினைவுகூரச் சொன்னது உண்மையில் அவரது துணிச்சலைக் காட்டுகிறது.

தான் யார் என்பதைக் காட்டிவிட்டுச் சென்றுவிட்டார் ராம்நாத் கோவிந்த் அவர்கள். கோட்சேக்களின் கூட்டத்தால் இந்தியாவுக்கு ஆபத்து' என்பதையும் உணர்த்திவிட்டார். காந்தி, திலகர், பகத்சிங், நேதாஜி, நேரு, படேல், தாகூர், அம்பேத்கர், சரோஜினி, கமலாதேவி ஆகிய பல்வேறு முகங்களை அவர் தனது உரையில் நினைவு கூர்ந்தாலும் இருவருக்குத்தான் அதிகமான அழுத்தம் கொடுத்தார். ஒருவர் அம்பேத்கர். இன்னொருவர் காந்தி.

அம்பேத்கரை நினைவுகூரக் காரணம் சமூக ஜனநாயகம் என்ற தத்துவத்துக்காக! காந்தியை நினைவுகூரக் காரணம் சமூக அமைதி என்ற தத்துவத்துக்காக!

இந்தியாவுக்கு இப்போதைய தேவை என்பது சமூக அமைதியும் சமூக ஜனநாயகமும் தான் என்பதை ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரை உணர்த்துகிறது. 'மனிதனாக இருப்பது அல்ல மனிதம், மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்' என்றவர் மகாத்மா காந்தி. அத்தகைய இந்தியா உருவாக வேண்டும் என்பதே அவரது உரையின் உள்ளீடு ஆகும்.

'சமூகத்தால் செய்யப்படும் சர்வாதிகாரம் அரசியலால் செய்யப்படும் சர்வாதிகாரத்தை விடக் கொடியது. இந்த சமூகம் உங்களுக்குச் சுதந்திரமான உணர்வைத் தராதவரை, சட்டம் எத்தகைய விடுதலையை உங்களுக்கு அளித்தாலும் அதனால் பயன் இல்லை' என்று சொன்னவர் டாக்டர் அம்பேத்கர். அத்தகைய இந்தியா உருவாக வேண்டும் என்பதே அவரது உரையின் உள்ளீடு ஆகும்.

சரியான மருந்தை அறிமுகம் செய்துவிட்டு விடைபெற்றுச் சென்றுள்ளார் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள். வாழ்க!

Also Read: “அ.தி.மு.க ஆட்சியின் லட்சணத்தை விளக்க குட்கா விவகாரம் ஒன்றே போதும்” : பழனிசாமி கும்பலை சாடிய முரசொலி !