M K Stalin
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் வைத்து தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), குமார் (33) ஆகிய 3 பேரை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் மகிமைதாஸ் (48) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாய் வெடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு உயிரிழந்த 3 பேரின் உறவினர்களும் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நியாமான கோரிக்கைக்காக போராடும் அவர்கள் மீது, கர்நாடக காவல்துறை தாக்குதலும் நடத்தி வருகிறது.
ஏற்கனவே கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே மேகதாது, காவிரி பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வலுத்த கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், இது குறித்து இதுவரை தமிழ்நாடு அரசு தரப்பிலோ, தவெக தரப்பிலோ யாரும் வாய் திறக்கவில்லை. குற்றம் செய்தவராயினும், அவரது உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கர்நாடகாவுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டன பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :-
கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.
மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
Also Read
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!