M K Stalin

“துரோகம் செய்து முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சி!” : திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கடும் கண்டனம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்து 3 நாட்கள் கடந்துள்ள நிலையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய் தலைமையிலான தவெகவை ஆட்சி அமைக்க இதுவரை அழைக்காதது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மை தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், திமுக கூட்டணியில் நீண்ட காலமாக இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தற்போது தவெக அணிக்கு மாறியிருப்பதற்கும் கடும் எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையில், வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தோழமை கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்ளிட்ட 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், தவெக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சிக்கும் வகையிலான கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானங்கள் பின்வருமாறு:-

காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம்!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது ஆகும். காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் நமது தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டணிக்கு எதிரான கருத்தை அக்கட்சியினர் சொன்னதை காங்கிரஸ் கட்சி தடுக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை.

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றது. தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது. அதைவிடக் கொடுமை என்ன என்றால், அப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள், அதன் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற காட்சியும் நடந்தது. அதாவது, தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும்போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி!

அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்துகொண்ட நம் கழகத் தலைவருக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.

பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: மக்களுக்கு நன்றி.. தலைவருக்கு அதிகாரம்.. : தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! (முழு விவரம்)