M K Stalin

“இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! திராவிட மாடல் 2.O-ல் இது பன்மடங்காகும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, எளிய மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்தும் வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று (மார்ச் 11) சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டித் தெருவில் ரூ.133 கோடி செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 700 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட ‘முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,

“குடிசையில்லாத் தமிழ்நாடு எனும் கனவை அடைந்திடும் நோக்கத்துடன் 1970-இல் தலைவர் கலைஞர் அவர்கள் “தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்” உருவாக்கினார்.

நமது திராவிட மாடலில் அதனை “நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” எனப் பெயர் மாற்றினோம். இது வெறும் பெயர் மாற்றமல்ல; செயலாற்றலில் புதுப் பாய்ச்சல் என நிரூபித்திருக்கிறோம்.

அதற்கான தரவுகள் இதோ:

கடந்த 2016-21 அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் என மொத்தம் 27,668 குடியிருப்புகள்தான் உருவாக்கப்பட்டன. ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் சென்னையில் 30,167 குடியிருப்புகள் மற்றும் பிற மாவட்டங்களில் 46,207 குடியிருப்புகள் என மொத்தம் 76,374 குடியிருப்புகளை உருவாக்கியுள்ளோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்தக் குடியிருப்புகளின் எண்ணிக்கையைவிட, நமது ஆட்சிக்காலத்தில் சென்னையில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகம். இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! இதுதான் செயலாற்றல்!

இதன் தொடர்ச்சியாக 700 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட “முதல்வர் நகர்ப்புறக் குடியிருப்புகள்” உள்ளிட்ட திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தேன்.

திராவிட மாடல் 2.O-வில் இது இன்னும் பன்மடங்காகும்!”

Also Read: 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஒப்பளிப்பு அரசாணை! : அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்!