M K Stalin

வடசென்னையில் ரூ.147 கோடியில் ‘முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்’ - திறந்து வைத்தார் முதலமைச்சர்..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.01.2026) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை, ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில், ரூ.147 கோடி செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட“முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” திறந்து வைத்து, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உன்னத திட்டமான வடசென்னை வளர்ச்சி திட்டம், வடசென்னை பகுதியின் சமர்ச்சீர் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு சுகாதாரம், கல்வி, நகர உட்கட்டமைப்பு, பாதுகாப்பான குடிநீர், கழிவுநீர் வசதி, மின்சாரம், வாழ்விடம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருகிறது.

=> “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” திறப்பு :

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக மண்ணடி, முத்தியால்பேட்டை, ஏழுகிணறு, பிராட்வே பிரகாசம் சாலை, வால்டாக்ஸ் சாலை, ஜட்காபுரம், கல்யாணபுரம், வுட்வொர்ஃப் போன்ற இடங்களில் நீண்ட காலமாக சாலை ஓரங்களிலும், கால்வாய் ஓரங்களிலும் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் முதலமைச்சர் அவர்களால் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் கடந்த 4.12.2024 அன்று சென்னை, வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, சென்னை, ஏழுகிணறு, பழைய சிறைச்சாலை சாலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில், 776 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்திடும் வகையில் முதலமைச்சர் அவர்கள் கடந்த 31.01.2025 அன்று களஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

அதன்படி, குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 147 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் தரைதளம் மற்றும் 9 தளங்களுடன் இரண்டு தொகுதிகளாக 3,26,609 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.

பின்னர், அங்கன்வாடி மையம், நகர்ப்புற நலவாழ்வு மையம், நியாய விலைக் கடைகள், முதல்வர் படைப்பகம், நவீன நூலகம், உடற்பயிற்சிக்கூடம், திறந்தவெளி அரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அவர்கள், முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். ஒதுக்கீட்டு ஆணைகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள் முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

“முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளில்” உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் 415 சதுர அடி பரப்பளவில் சமையலறை, கூடம் (Hall), படுக்கைஅறை, கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதோடு மாற்றுத்திறனாளிகளுக்கென 40 குடியிருப்புகளும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” வளாகத்திலுள்ள உட்கட்டமைப்பு வசதி கட்டடத்தில் "அங்கன்வாடி மையம்", நகர்ப்புற நல வாழ்வு மையம், "நியாய விலைக் கடைகள்", “முதல்வர் படைப்பகம்”, “நவீன நூலகம்”, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேக “உடற்பயிற்சிக் கூடம்” அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இவ்வளாகத்தில் மாணவச் செல்வங்களை நெறிப்படுத்தும் வகையில் “திறந்தவெளி அரங்கம்”, “குழந்தைகள் விளையாட்டுப் பகுதி”, பூங்காக்கள், 8 எண்ணிக்கையிலான மின்தூக்கி வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், சீரான மின்சாரம் வழங்கிடும் வகையில் இரண்டு எண்ணிக்கையிலான 500 KVA திறன் கொண்ட மின்மாற்றிகள், 6 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தீயணைப்பு குழாய் தொட்டிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

=> புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டுதல் :

சென்னை, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் “ஒருங்கிணைந்த வளாகத்தில்" 700 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன. இதன் அருகில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 9 தளங்களுடன் கூடுதலாக 144 புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தொடங்கி வைத்தார்.

Also Read: கடுமையான போக்குவரத்து.. சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்.. கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கிய பெண் காவலர்! | VIDEO