M K Stalin
“கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை” : கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.10.2025) முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு ஆற்றிய உரை:-
நம்முடைய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது, கிராமங்கள்தான்! அதனால்தான், நம்முடைய தேசத்தந்தை காந்தி அவர்கள், “விடுதலை இந்தியாவின் வலிமை கிராமங்களில்தான் இருக்கிறது” என்று சொன்னதோடு, “இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது” என்று ஆணித்தரமாக சொன்னார்.
அப்படிப்பட்ட கிராமங்களை முன்னேற்ற வேண்டும் -கிராமப் பொருளாதாரத்தை வலிமையாக்க வேண்டும் – கிராம நிர்வாகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்று ஜனநாயகப்பூர்வமாக சிந்தித்து, நாம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்!
இந்தத் திட்டங்கள்தான் தமிழ்நாட்டின் கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டுக்கு அடிப்படை! அதனால்தான், நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தொடர்ந்து கிராம சபைக் கூட்டங்களில் பங்கெடுத்தேன்.உங்கள் ஆதரவோடு முதலமைச்சரான பிறகு, இப்போது மூன்றாவது முறையாக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறேன்.
இன்னும் பெருமையோடு சொல்கிறேன்… வேறெந்த முதலமைச்சரும் இப்படி கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றதில்லை! அதிலும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும் இணைய வசதி மூலமாக இணைத்து, கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது இதுதான் முதல்முறை!
இதை சாத்தியப்படுத்திய மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
அதேபோல, நம்முடைய ஜனநாயக அமைப்பின் அடித்தளமான கிராமங்களை உயர்த்த பணியாற்றிவரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறையின் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்களுக்கும், பொன்னையா உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
என்றைக்கும் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றும் இந்த எண்ணத்தை நமக்குள் விதைத்தவர், தமிழ்நாட்டின் தலைமகனான பேரறிஞர் அண்ணா அவர்கள்! அவர்தான், “மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய்” என்று நமக்கு கட்டளையிட்டு, நம்மையெல்லாம் ஆளாக்கியவர்!
பேரறிஞர் அண்ணா காட்டிய பாதையில்தான், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சமூகநீதி, சமத்துவம், சமதர்மம் போன்ற உயர்ந்த இலட்சியங்களைச் செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிகளை வழி நடத்தினார்.
தலைவர் கலைஞரின் வழித்தடத்தில்தான், நம்முடைய திராவிட மாடல் அரசும் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி, சமத்துவம், சமதர்மம் மற்றும் சமூகநீதியை நிலைநாட்டி வருகிறது.
நாட்டிற்கே வழிகாட்டுகின்ற மாதிரியான ஏராளமான திட்டங்களை, நீங்கள் உருவாக்கிய நம்முடைய திராவிட மாடல் அரசு உருவாக்கியிருக்கிறது!
கிராமப்புற பொருளாதாரத்தையும், பெண்களின் முன்னேற்றத்தையும் சாத்தியப்படுத்திய மாபெரும் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் திட்டம்!
உங்களில் நிறைய பேர் சுய உதவிக்குழுக்களால் பயனடைந்திருப்பார்கள். துணை முதலமைச்சராக இருந்தபோ‘து, நானே பல மணிநேரம் மேடைகளில் நின்று சுழல்நிதி வழங்கியிருக்கிறேன்.
இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலாகதான், மகளிர் உரிமைத் தொகை வழங்குகிறோம்! நீங்கள் எல்லோரும் கட்டணமில்லாமல் பேருந்தில் செல்கிறீர்களே, அந்த விடியல் பயணத் திட்டம் பெண்கள் முன்னேற்றத்தில் எவ்வளவு பெரிய பங்களிப்பை செலுத்துகிறது என்று எண்ணிப் பாருங்கள்…
நீங்கள் காலையில், சீக்கிரம் வேலைக்கு போகவேண்டும் என்று அவசர அவசரமாக கிளம்புவீர்கள்.. அதற்கு நடுவில் சமையல் செய்யவேண்டும்.. ஆனால், அந்த சுமையை குறைக்க – அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற நம்முடைய குழந்தைகளுக்கு சத்தாகவும் – சுவையாகவும் காலை உணவு வழங்குகிறோம்!
நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் காலேஜ் முடித்துவிட்டு வேலைக்குப் செல்வதற்கு தயாராக இருக்கின்ற அளவுக்கு – நான் முதல்வன் திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குகிறோம்!
நம்முடைய பிள்ளைகள் படித்து முன்னேறி வரவேண்டும் என்று புதுமைப்பெண் – தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இப்படி, ஒவ்வொரு துறையிலும், பல திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது!
இதையெல்லாம் முத்திரைத் திட்டங்கள்! இதேபோல, கிராம வளர்ச்சிக்கு என்று பல திட்டங்களை செயல்படுத்துகிறோம்! கிராம மக்கள் தங்களுடைய ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்கவும், வளர்ச்சிப் பாதையில், கிராம ஊராட்சியை கொண்டு செல்லவும், உரிய உரிமைகளை அளிக்கவேண்டும் என்பதுதான் நம்முடைய அரசின் நோக்கம்!
அதற்காக, ஆண்டுதோறும் ஆறு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தக் கிராமசபைக் கூட்டங்கள்தான், ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கின்ற முக்கிய தருணம்!
நம்முடைய கிராமங்களின் தற்போதைய தேவைகள், வளர்ச்சி இலக்குகள் மற்றும் நலன்கள் குறித்து நேரடியாக விவாதித்து, தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற ஒரு விழாவாக கொண்டாடப்பட வேண்டும்.
நம்முடைய திராவிட மாடல் அரசு - சமூகநீதி, சமத்துவத்தை நிலைநாட்ட, சுயமரியாதை அடிப்படையிலான சமூகத்தை உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாகதான், குடியிருப்புகள், சாலைகள், தெருக்களில் இழிவான தன்மையோடு சாதிப் பெயர்கள் இருந்தால், அதை மாற்றி பொதுப் பெயர்களை சூட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும், ‘நம்ம ஊர், நம்ம அரசு’ என்ற பெயரில், கிராம சபையில் மக்கள் கலந்தாலோசித்து, 3 முக்கிய தேவைகளைத் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
அப்படி கண்டறியப்படும் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.
குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்டிவிடும் வகையில், ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற புரட்சிகரத் திட்டம் துவங்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு முடிவெடுத்து, 2024-25-ல் இதுவரை, 99 ஆயிரத்து 453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
2025-26-ல், இன்றைய நிலையில், 78 ஆயிரத்து 312 வீடுகள் கூரை மட்டம் நிலைக்கு மேல் முன்னேற்றத்தில் இருக்கிறது. அதேபோல, சாலை வசதிகளை பொறுத்தவரைக்கும், 2022–23-ஆம் ஆண்டில் அறிமுகமான முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் – நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி – உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் – 21 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலைகள் மற்றும் பாலங்களை மேம்படுத்தியிருக்கிறோம்!
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், கிராமங்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, சாலை, குடிநீர், பள்ளிக்கூடங்கள், நூலக வசதிகள் போன்ற சேவைகள் விரிவாக்கப்படுகிறது. தாயுமானவர் திட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது!
இவ்வளவு திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் நம்முடைய அரசு செய்து கொண்டு வந்தாலும், குடிமக்களாக ஒவ்வொரு தனிநபருக்கும் பல பொறுப்புகள் இருக்கிறது! அதையெல்லாம் நாம் சரியாக செய்து, நாம் தான் நம்முடைய கிராமத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகவேண்டும்! உங்கள் முதலமைச்சராக, உங்களில் ஒருவனாக அதற்காக சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்…
ஒவ்வொரு வீட்டிலும், குழந்தைகள் படிப்பதை நாம் எல்லோரும் உறுதி செய்யவேண்டும்! எங்கேயாவது – யாராவது – குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால், உடனே மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்து, அவர்களை மீட்கவேண்டும்!
இதை, கிராம ஊராட்சிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என்று எல்லோரும் பொறுப்புடன் கண்காணிக்க வேண்டும். அடுத்து, கிராம மேம்பாட்டுக்கு முக்கியமான திட்டமான, நூறு நாள் வேலைத் திட்டம்! இந்தத் திட்டம் முறையாக செயல்பட்டு வருவதை கண்டிப்பாக உறுதி செய்யவேண்டும்! இந்தத் திட்டத்தில், வரவு செலவு எவ்வளவு? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது? என்று அனைத்துத் தகவல்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
அடுத்து, ஒவ்வொரு தனிமனிதருக்கும், சமூகப் பொறுப்பு இருக்கவேண்டும்! நம்முடைய வீடு குப்பைக் கூளமாக இருந்தால், சும்மாவா இருப்போம்? நம் எல்லோருடைய வீடும் சேர்ந்ததுதான் நம்முடைய கிராமம்… அதை சுத்தமாக வைத்துக் கொள்கின்ற பொறுப்பு நமக்குதான் இருக்கிறது! முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்… குப்பைகள் – ஊராட்சிகளில் வருகின்ற பேட்டரி வண்டிகளில், மக்கும் குப்பை - மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்துப் போடவேண்டும். கண்ட இடத்தில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும்!
ஊராட்சி நிர்வாகங்களை சேர்ந்தவர்கள் குப்பைகளை பிரிப்பது, கழிவுநீர் மேலாண்மை பற்றியெல்லாம், மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்! என்னடா, இதையெல்லாம் சிறிய சிறிய விஷயம் தானே, இதையெல்லாம் முதலமைச்சர் சொல்ல வேண்டுமா என்று நினைக்கிறீர்களா? சிறிய சிறிய விஷயங்களை நாம் கரெக்டாக செய்தாலே, பெரிய பெரிய நன்மைகள் நிச்சயம் உண்டாகும்! நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம் என்று எல்லோருக்குமே தெரியும்! இந்த நோயற்ற வாழ்வுக்கு சுகாதாரம்தான் அடிப்படை!
மருத்துவ அலுவலர்களும், ஊராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஒழுங்காக மேற்கொள்ளப்பட்டு, கிராம மக்களுடைய ஆரோக்கியம் மேம்படும்! அதனால், நம்முடைய கிராமங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதில் யாருக்கும் அலட்சியம் இருக்கக் கூடாது!
அடுத்து, புவி வெப்பமடைதல்! உங்களுக்கு நன்றாக தெரியும்… இப்போதெல்லாம் முன்பு போல சரியான நேரத்துக்கு – சரியான அளவுக்கு மழை பெய்வதில்லை! இதற்குக் காரணம், காலநிலை மாற்றம்! இதுபற்றிய விழிப்புணர்வும், கிராம மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டும்!
அடுத்து, மக்களுடைய முக்கிய பிரச்சினையாக இருப்பது, தண்ணீர் பற்றாக்குறை! “பணத்தைத் தண்ணியாக செலவழிக்கிறார்கள்” என்று சில பேர் சொல்லுவார்கள்… உண்மையில், “தண்ணியைத் தான் பணம் போல பார்த்து, பார்த்து செலவழிக்க வேண்டும்”. தண்ணீர் பற்றாக்குறை வராமல் இருப்பதற்கு மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியமானது! இதனால்தான், நிலத்தடி நீர்வளம் மேம்பட்டு, கிராமங்களுக்கு நீண்டகால நீர்ப் பாதுகாப்பு ஏற்படும்! இதற்கான பொறுப்பு, நம்முடைய எல்லோரிடமும் தான் இருக்கிறது!
எனவே, இதற்காக அரசும், ஊராட்சிகளும் எடுக்கின்ற முயற்சிகளுக்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, மழைக்காலம் தொடங்கப் போகிறது! டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைத் தடுக்கின்ற சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முன்பே, அனைத்து ஊராட்சிகளிலும், அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். வீதிகள், குடிநீர், மின்சாரம், வடிகால் போன்ற அடிப்படை சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அவசரத் திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்புக் குழுக்களை அமைத்து, அவசர கால நடவடிக்கைகளை திட்டமிடவேண்டும். இதனால், பேரிடர் நேரங்களில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை குறைக்கலாம்,
அடுத்து, நான் முக்கியமாக சொல்ல விரும்புவது - கிராம ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும். கிராம சபை மூலம் வரவு – செலவு கணக்குகள் மக்களிடம் விளக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலோடு செயல்படவேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியும் எப்போது, எவ்வளவு செலவிட்டது என்று மக்கள் தெரிந்து கொள்கின்ற வகையில் தகவல்கள் பகிரப்படவேண்டும். இந்தக் கூட்டத்தில், நீங்கள் முன்வைக்கின்ற ஒவ்வொரு பரிந்துரையும் பல்வேறு திட்டங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
நம்முடைய கிராமங்கள்தான் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், மக்கள் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதிசெய்கின்ற அரசு இது!
“கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை” என்று நம்முடைய செயல்பாடுகளால் நிரூபித்துக் காட்டுவோம்!
Also Read
-
இந்தியாவிலேயே முதல்முறை... சர்வதேச தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்து வைத்தார் முதல்வர்!
-
“ஜி.டி.நாயுடுவை யாரும் நாயுடுவாக பார்க்கவில்லை...” - விமர்சனங்களுக்கு கி.வீரமணி பதிலடி!
-
"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !
-
“தங்கத்தை விட கலைமாமணி விருதுக்குதான் மதிப்பு அதிகம்.. ஏனெனில்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
"நாடாளுமன்றத்தில் தற்போது முறையான விவாதமே நடைபெறவில்லை" - கனிமொழி எம்.பி. விமர்சனம் !