M K Stalin
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கான 8 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று (2.9.2025) டசெல்டோர்ஃப் நகரில் உள்ள வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநில அதிபர் அலுவலகத்தில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) மாநிலத்தின் அமைச்சர் - அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட் அவர்களை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு, இந்தியாவின் தொழில் மற்றும் சமூக ரீதியாக மிகவும் முன்னோடி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு; ஜெர்மனியின் பொருளாதாரத்தில், உயர் மதிப்பு உற்பத்தி, பசுமை ஆற்றல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னணி மாநிலமாக விளங்கும் வடக்கு ரைன் ஆகிய இரு மாநிலங்களின் தலைமையை ஒன்றிணைத்துள்ளது.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர் - அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட் இடையேயான சந்திப்பின்போது, மின்சார இயக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில் 4.0, இரட்டை தொழில் பயிற்சி, மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளில் இரு மாநிலங்களின் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் துறையில் கூட்டாண்மைகள் மூலம் இரு மாநிலங்களும் உறவை மேலும் வலுப்படுத்த விரும்புகின்றன. தமிழ்நாட்டின் மிகவும் திறமையான மற்றும் படித்த இளைஞர்கள் ஜெர்மனியின் திறமையான மனிதவளத்திற்கான வளர்ந்து வரும் தேவைக்கு பங்களிக்க வழிவகை செய்வது குறித்தும் முதலமைச்சர் அவர்கள் விவாதித்தார்.
மேலும், இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் அவர்கள், வடக்கு ரைன்- வெஸ்ட்பாலியா (NRW) மாநிலத்தின் அமைச்சர் - அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட் அவர்களையும், அம்மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை கொண்ட குழுவினையும் தமிழ்நாட்டிற்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு மற்றும் வடக்கு வெஸ்ட்பாலியா, பல்வேறு காரணிகளில் சமமானவை ஆகும். குறிப்பாக, இரண்டு மாநிலங்களும் வாகன உற்பத்தி, மின்னணுவியல் மற்றும் இயந்திரங்களுக்கான உற்பத்தி, காலநிலை மீள்தன்மை மற்றும் புதுமை சார்ந்த வளர்ச்சி போன்றவற்றில் முக்கியத்துவம் அளிக்கின்றன.
நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியால் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இரு மாநிலங்களும் இயற்கையான கூட்டாளிகள் ஆவர்.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ரூ.7,020 கோடி முதலீட்டிற்கான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றின் மூலம் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பல ஜெர்மன் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ளவும், விரிவுபடுத்தவும் முன்வந்துள்ளன. இது தமிழ்நாட்டின் நிர்வாகம் மற்றும் பொருளாதாரத்தின் உறுதியான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ஐரோப்பிய பயணத்தின் அடுத்த கட்டமாக இங்கிலாந்து நாட்டில் முதலீட்டாளர் சந்திப்புகளை தொடர்வார்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!