M K Stalin

ரூ.290 கோடியில் கட்டப்படும் திருச்சி நூலகத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர்’ பெயர்! : முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 1) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்ப, அதற்கான விடைகளை துறை சார்ந்த அமைச்சர்கள் அளித்தனர். அப்போது, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்படும் மாபெரும் நூலகங்களுக்கு, தமிழ்நாட்டின் மாபெரும் தலைவர்களுடைய பெயர்கள் சூட்டப்படுகின்றன.

முத்தமிழறிஞர் கலைஞரின் முன்னெடுப்பால் கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’ என பெயர் சூட்டப்பட்டது.

மதுரையில், முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரால் நூலகம் அமைக்கப்பட்டு, அதுவும் ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டு மாபெரும் சாதனையை செய்துள்ளது திராவிட மாடல் அரசு. இதுவரை 16 லட்சம் பொதுமக்களும், மாணவர்களும் இந்த நூலகத்தினால் பயனடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, கோவையிலும் திருச்சியிலும் அடிக்கல் நாட்டப்பட்டு, உலக தரத்திலான நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கோவையில் தந்தை பெரியார், சென்னையில் பேரறிஞர் அண்ணா, மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் நூலகங்கள் அமைந்திருக்கிறது மற்றும் அமைய இருக்கிறது போல, திருச்சியில் ரூ.290 கோடியில் அமைக்கப்பட்டு வரும், நூலகத்திற்கு, ‘பெருந்தலைவர் காமராஜர்’ பெயர் சூட்டப்படுவது பொருத்தமாக இருக்கும்.

எனவே, தமிழ்நாட்டில் கிராமங்கள் முழுவதும் பள்ளிகளை தொடங்கி, மதிய உணவை அளித்து லட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்ணை திறந்து வைத்து, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட பெருந்தலைவர் காமராஜர் பெயர், திருச்சி நூலகத்திற்கு சூட்டப்படும்” என அறிவித்தார்.

Also Read: தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு : ஒன்றிய அரசின் செயலால் விலைவாசி உயரும் அபாயம் !