M K Stalin
“சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த முறைகேடு சம்பவங்கள் நடந்துள்ளது.
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது. இதையடுத்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் ஜூன் 23-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நீட் முறைகேடு குறித்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இன்றும் பீகாரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் 9 மாணவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து நீட் முறைகேடு குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :
நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்று வரும் சர்ச்சைகள், சமத்துவத்துக்கு எதிரான அதன் தன்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்துக்காக பல வாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களுக்கான வாய்ப்புகளுக்கு 'நீட்' தடை போடுகிறது.
தேசிய தேர்வு முகமை மேல் தவறில்லை என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பேசியிருந்தாலும், நடந்து வரும் நிகழ்வுகள் அதற்கு மாறான சித்திரத்தையே அளிக்கின்றன.
தேர்வுக் கண்காணிப்பாளர்கள் பணம் பெற்றுக்கொண்டு OMR விடைத்தாள்களில் திருத்தம் மேற்கொண்டது, அதற்கு ஆதாரமாகப் பல கோடி ரூபாய்க்கான காசோலைகள், தொகை குறிப்பிடப்படாத காசோலைகள் கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட புகார்கள் மீது குஜராத் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்துள்ளனர்.
இந்தச் சதிச்செயலில் பள்ளி முதல்வர், இயற்பியல் ஆசிரியர், பல நீட் பயிற்சி மையங்களும் கூட்டு சேர்ந்து ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு அமைப்பு ரீதியாகவே மாற்றம் தேவைப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நீட் ஒழிப்புப் போராளி மாணவி அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்கள் இத்தேர்வினால் பரிதாபத்துக்குரிய முறையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதை நாம் பார்த்துவிட்டோம். இனியும் பொறுக்கலாகாது.
தகுதிக்கான அளவுகோல் எனப் பொய்வேடம் தரித்த நீட் தேர்வு சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊடுருவிப் பாதிக்கும் ஒரு மோசடி என்பது திரும்ப திரும்ப நிரூபணமாகிவிட்டது. 'மாணவர்களுக்கு எதிரான - சமூகநீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான' இந்த நீட் முறையை ஆதரிப்பதை ஒன்றிய அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்!
Also Read
-
“தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி.. திமுக மாணவரணி போராட்டம்.. ஸ்தம்பித்த தமிழ்நாடு”
-
மதிமுகவின் வரலாறு அறிந்தவர்கள் திமுகவினர்.. So நீங்க போய் விசில் அடிங்க.. -மதிமுகவுக்கு சிவசங்கர் பதிலடி!
-
விஜய்க்கு சொந்தப் புத்தி இல்லை என்பதற்கு இதுவே சாட்சி... வெளுத்து வாங்கிய முரசொலி!
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!