M K Stalin
"பாஜக, ஆளுநர்கள் மூலமாகக் குடைச்சல் கொடுப்பதை தொடர்ந்து எதிர்ப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை !
இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில்கூட ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலங்கானா ஆளுநர் தமிழிசை மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நீதிபதிகள் ஆளுநர்களை கடுமையாக விமர்சித்து எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கைக்கு பணிந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருந்த மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பினார்.
அதன் பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், 10 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு 'I withhold assent' என மாண்புமிகு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதம்! ஜனநாயக விரோதம்! மக்கள் விரோதம்! மனச்சாட்சி விரோதம்! பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், ஆளுநர்களின் மூலமாகக் குடைச்சல் கொடுப்பதை, தொடர்ந்து எதிர்ப்போம்!" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!