M K Stalin

மரணக்குழி நீட் : தமிழ்நாடு முழுவதும் கழக அணிகளின் உண்ணாவிரத போராட்டம்.. லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - ‘நீட்’ தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் (2017 ஆம் ஆண்டு) நுழைந்தது. இந்த நீட் தேர்வினால் ஏழை, எளிய மாணவர்கள் தங்கள் மருத்துவ கனவை துறக்க வேண்டியது இருக்கிறது. அன்றிலிருந்து 17க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ‘நீட்’ தோல்வி பயம் காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. அண்மையில் கூட குரோம்பேட்டையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். தனது மகன் இறந்த துயரத்தை தாங்க முடியாத தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரின் அதிகார பேச்சுக்கும், மோடி அரசின் மெத்தன போக்குக்கும் எதிர்க்கட்சிகள் உட்பட மாநில மக்கள் அனைவரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

‘நீட்’ தேர்வு நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் பரிந்துரைக்கு இரண்டு முறை அனுப்பப்பட்டும் பயன் இல்லை. இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய பாஜக அரசையும், ஆளுநர் ரவியையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

“மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும், ஆகஸ்ட் 20 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெறும்!” என தி.மு.கழக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி கூட்டறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் துரை முருகன், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவர் அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். பொதுச்செயலாளர் துரைமுருகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் நீட் தேர்வால் தங்கள் மருத்துவ கனவு பலியானதால் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவ - மாணவிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

Also Read: நீட் திணிப்பு - களத்தில் அமைச்சர் உதயநிதி : நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?