M K Stalin
"வேறுபாடுகள் களைந்து ஒற்றுமை பொங்கட்டும்,சமதர்மம் பொங்கட்டும்"-முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். " தாய்த் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் திருநாள் இது, பொங்கல் திருநாள் இது, உழவர் திருநாள் இது. உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து, நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல, மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த வேட்டைச் சமூகம் நம்முடையது.
இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு மற்ற உயிரினங்கள் இவை அனைத்திற்கும் சேர்த்து கொண்டாடும் ஒற்றை விழாதான் பொங்கல் பெருவிழா. கற்பனைக் கதை இல்லாத பண்பாட்டுப் பெருவிழா. வானம் பொழிந்தது, பூமி செழித்தது என்றல்லாமல் வானம் கொடுத்தது, பூமி பெற்றது என்று அன்பான உணர்வை நிலத்தின் மீது நின்று வான் நோக்கி, கரம் குவித்து உதயசூரியனை வணங்குவதன் மூலமாக உலகுக்கு நாம் உணர்த்துகிறோம். புதுப்பானையில் புத்தரிசி போட்டு, புத்தொளி ஊட்டி, உள்ளங்களில் பொங்கும் உணர்ச்சியால் அடுப்பு மூட்டி, பானைக்கு மேலே வழிந்தோடும் அன்பு நுரையானது, நாடு முழுக்க அனைவர் வீடுகளிலும் பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதனால்தான், இந்த தை மாதத்தைத் தமிழ்மொழியின் பெருமையை பறைசாற்றும் மாதமாகவும் நாம் கொண்டாடி வருகிறோம். பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், தமிழர் திருநாள், திருவள்ளுவர் தினம், இலக்கியத் திருவிழா, கலைத் திருவிழா, நம்ம ஊரு திருவிழா, ஏறு தழுவுதல் இப்படி தை மாதம் முழுக்கவே தமிழ் மாதமாகவே, தமிழர் மாதமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மத வேறுபாடுகள், சாதியப் பாகுபாடுகள் இவை எவையும் இல்லாமல் தமிழர்கள் அனைவரும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் சமத்துவப் பெருவிழாதான் பொங்கல் விழா.
துன்பங்கள் துடைக்கப்பட்டு இன்பம் பொங்கட்டும். வருத்தங்கள் போக்கி மகிழ்ச்சி பொங்கட்டும். வேறுபாடுகள் களைந்து ஒற்றுமை பொங்கட்டும், மாறுபாடுகள் விலகி சமதர்மம் பொங்கட்டும். உழைப்பை வணங்குவோம். உழைப்பவரை வணங்குவோம். வேளாண்மையை வணங்குவோம். விளைவிக்கும் உழவரை வணங்குவோம். மனிதர்களோடு சேர்த்து பல்லுயிரையும் வணங்குவோம். மண்ணை வணங்குவோம். மண்ணின் வளத்தை எந்நாளும் காப்போம். இயற்கையை வணங்குவோம். இயற்கை மனிதர்களாக எந்நாளும் நடப்போம். தாய்த் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும்.
அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read
-
“நிவேதாவின் முயற்சிகளுக்கு அரசு உடன் நிற்கும்” : திருநங்கை மாணவியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர்!
-
இந்துக்களுக்காக கண்ணீர் விடும் பாஜக 10 ஆண்டு காலத்தில் இந்துக்களுக்காகச் செய்தது என்ன? : முரசொலி கேள்வி!
-
மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முழக்கமிட்ட விவசாயிகள்... மோடி கையாண்ட உத்தி என்ன?
-
மிரட்டலா? அல்லது பதவி ஆசையா? : பா.ஜ.க.விற்கு இழுக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!
-
“ஸ்மிருதி இராணிக்கு வாக்களிக்கக்கூடாது...” - அமேதியில் கூட்டாக சேர்ந்து உறுதி மொழி எடுத்த சமூகத்தினர் !