M K Stalin
“இவரை பார்க்காமல் எப்படி சென்னையை விட்டு செல்ல முடியும்?”-முதல்வரை சந்தித்த பின் மம்தா நெகிழ்ச்சி பேட்டி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு சகோதரர் போன்றவர் என்றும், அவரை சந்திக்காமல் எப்படி சென்னையை விட்டு செல்ல முடியும் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டியளித்துள்ளார்
தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், தற்போது மணிப்பூர் ஆளுநராக மட்டுமல்லாமல் மேற்கு வங்க ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மூத்த சகோதரரின் 80 ஆவது பிறந்த நாள் விழா சென்னையில் இந்த வாரம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுத்தின் பேரில் அவர் இன்று சென்னை வந்தார். சென்னை வந்த அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி இந்த சந்திப்பு குறித்து பேட்டியளித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர், “மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்னைக்கு பலமுறை வந்திருக்கிறார். குறிப்பாக தலைவர் கலைஞரின் திருவுருவ சிலையை முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்து கலைஞர், திமுக, தமிழ்நாடு என்று அனைவரையும் பெருமை படுத்தியுள்ளார்.
தற்போது இல.கணேசன் இல்ல விழாவுக்கு வருகை தந்திருக்கும் இவர், மரியாதையை நிமித்தமாக என்னை தனது வீட்டில் வந்து சந்தித்துள்ளார். மேலும் மேற்கு வங்க கொல்கத்தாவிற்கு சிறப்பு விருந்தினராக வருமாறு எனக்கு அழைப்பும் விடுத்துள்ளார். இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. இது நட்பு சந்திப்பு மட்டுமே” என்றார்.
தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக்கு சகோதரர் போன்றவர். நான் இவரை தற்போது மரியாதையை நிமித்தமாக சந்திக்க வந்துள்ளேன். எனது ஆளுநர் இல.கணேசன் அவரது குடும்ப விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதனால் தான் நான் சென்னைக்கு வந்துள்ளேன்.
சென்னைக்கு வந்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் எப்படி செல்ல முடியும். அதனால் அவரை இங்கு சந்திக்க வந்தேன். வளர்ச்சிகள் குறித்து நாங்கள் பேசினோம். அரசியலை விட வளர்ச்சி என்பது சிறந்தது. எந்தவொரு அரசியல் தலைவர்கள் பற்றியும் கருத்து கூறவிருப்பமில்லை. இது நிச்சயமாக தனிப்பட்ட, மரியாதை நிமித்தமாக, சகோதரர் உறவுக்கான சந்திப்பு தானே தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!