M K Stalin
"நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற வெற்றியினை அடைய, களப் பணியாற்றுங்கள்." -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
தோழமைக் கட்சித் தலைவர்களும் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும் என் மீது அன்பு கொண்ட சான்றோர்கள் பலரும் அலைபேசியிலும், சமூக வலைத்தளங்களிலும், கடிதம் வாயிலாகவும் தொடர்ந்து வாழ்த்துகளை வழங்கியபடி இருந்தனர். தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ். அழகிரி அவர்கள், எந்நாளும் திராவிட முழக்கமிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்கள், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரான மருத்துவர் இராமதாசு அவர்கள், புதுவை மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. நாராயணசாமி அவர்கள், பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கொள்கைத் தோழமைமிக்க சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் சகோதரர் வேல்முருகன் எம்.எல்.ஏ. அவர்கள், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கலைஞானி கமல்ஹாசன் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை வழங்கியுள்ளனர். ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். தவத்திரு குன்றக்குடி அடிகளார், கவிப்பேரரசு வைரமுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, செல்வப்பெருந்தகை ஆகியோர் தங்கள் அன்பான வாழ்த்துகளை அலைபேசி வாயிலாகத் தெரிவித்தனர்.
இந்த வாழ்த்துகள் எனக்கு மட்டுமானதல்ல. கழகத் தலைவர் என்ற பொறுப்பை சுமக்கின்ற என்னைத் தாங்கி நிற்கும் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்குமான வாழ்த்துகள். அந்த வாழ்த்துச் செய்திகளின் அடிநாதமாக இருப்பது, கழகத்தின்மீது தமிழ்நாடு வைத்துள்ள நம்பிக்கையும் இந்திய அளவிலான எதிர்பார்ப்பும்தான்.
பொதுக்குழுவில் என் பேச்சில் குறிப்பிட்டதுபோல, “நம்மைப் போல இலட்சக்கணக்கான தோழர்கள் - தொண்டர்கள் இந்தத் தமிழினத்துக்கு உழைக்க சுயமரியாதை காக்கக் காத்திருக்கிறார்கள். நமது பொறுப்பும் கடமையும் மிக மிகப் பெரியது. எந்தப் பொறுப்பாக இருந்தாலும், அதனை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் பொறுப்புகள் தொடரும். மறந்துவிடாதீர்கள்! நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்சினையையும் உருவாக்கி இருக்கக்கூடாதே என்ற கவலையான நினைப்போடுதான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னைத் தூங்விடாமல் கூட ஆக்கிவிடுகிறது. உங்களது செயல்பாடுகள் கழகத்துக்கும் உங்களுக்கும் பெருமை தேடித் தருவது போல அமைய வேண்டுமே தவிர, சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது” என்பதை மனதில் கொள்ளுங்கள்.
பதவிப் பொறுப்புக்கு வர இயலாமல் போன இயக்கத் தோழர்களை அரவணைத்துச் செயல்படுங்கள். வெறும் வாயை மெல்லும் அரசியல் எதிரிகளின் வாயில் அவல் அள்ளிப் போடுவது போன்ற சொல்லையும் செயலையும் தவிர்த்திடுங்கள். நம்முடைய இலட்சியம் உயர்வானது. நமக்கான பாதை தெளிவானது. ஆனால், பயணம் எளிதானதல்ல. மதவெறிச் சக்திகளும், வெறுப்பரசியல் கூட்டமும், இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கின்ற சதிகளும் அடிக்கு அடி குறுக்கிடுகின்ற காலம் இது. அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டு பயணிக்கின்ற வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. மக்களின் பேராதரவும் நமக்கு இருக்கிறது.
கழக அமைப்பு மேலும் வலிவு பெறும் வகையில் பொது உறுப்பினர்கள் கூட்டத்தை அதிகளவில் நடத்துங்கள். கழகத்தின் கொள்கைகளையும் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தெருமுனைப் பிரச்சாரங்களை, திண்ணைப் பிரச்சாரங்களை நடத்துங்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் திட்டங்கள் சரியான முறையில் போய்ச் சேர்ந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்தி, பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறுங்கள். அரசியல் எதிரிகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை உருவாக்கும் பணியை இப்போதே தொடங்குங்கள். முப்பெரும் விழாவில் நான் சொன்னது போல, நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற வெற்றியினை அடைய, களப் பணியாற்றுங்கள்.
தலைவனாக அல்ல, உயிர்நிகர் தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட தலைமைத் தொண்டனாக உங்களில் ஒருவனான நானும் களத்தில் முதன்மையாக நிற்பேன். பொதுக்குழுவில் சொன்னதை பொதுமக்களிடம் கொண்டு சென்று செயல்படுத்துவோம். கடைக்கோடித் தொண்டர் முதல் கட்சித் தலைவர்கள் வரை நெஞ்சார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி மலர் தூவி, நாட்டு நலப் பணியினை நாள்தோறும் தொடர்கிறேன்.
Also Read
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!
-
மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்த தவெக அரசு முடிவு: அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு!
-
“2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. 6 அணிகள்.. தகுதிச்சுற்று நடைமுறையை வெளியிட்ட ஐசிசி” - முழு விவரம்!
-
4 முறை சாம்பியனை வீட்டிற்கு அனுப்பிய குட்டி நாடு - ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே கொடுத்த மாஸ் வெற்றி!
-
“தூக்கில் தொங்கிய படி.. காதல் ஜோடி சடலங்கள் மீட்பு.. ஆணவக் கொ*லையா?” - மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்!