M K Stalin
“பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை எண்ணிப்பாருங்கள்” - ராஜஸ்தான் முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து காற்று மாசு நீடித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வரும் நவம்பர் மாதம் முழுவதும் மேற்குறிப்பிட்ட நான்கு மாநிலங்களிலும் பட்டாசு வெடிக்க தடை விதிப்பது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குளிர்காலம் தொடங்கி இருப்பதாலும், காற்று மாசு அதிகரித்திருப்பதாலும், கொரோனா பாதிப்பும் அதிகமாகி வருவதையும் வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
பசுமை பட்டாசுகள் காற்று மாசை தடுப்பதற்கு ஒரு தீர்வு ஆகாது என்றும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். பசுமை பட்டாசுகள் மூலம் ஏற்படும் புகையும் காற்று மாசை உருவாக்குவதாக வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து நான்கு மாநில காவல்துறை கண்காணிப்பாளர்களும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், “கொரானா தொற்றைக் காரணம் காட்டி பட்டாசு வெடிக்க ராஜஸ்தான் மாநில அரசு தடை போட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இந்தப் பேரிடரால் ஏற்கனவே பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு தயாரிப்பாளர்களும் பொருளாதார ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் தடுமாற்றத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். இப்படியொரு துயரம் மிகுந்த சூழலில், தீபாவளிப் பண்டிகைதான் அவர்களுக்கு ஓர் ஆறுதலாக இருக்கிறது.
ஆனால் அந்தப் பண்டிகைக் காலத்திலும் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று போடப்பட்டுள்ள இந்தத் தடை ஒட்டுமொத்த பட்டாசு தொழிலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
பல்லாயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களின் நலன் கருதி பட்டாசு வெடிக்க விதித்திருக்கும் தடையை ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
காவிரி விவகாரம்.. முதலமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!
-
“விவசாயிகளுக்காக தஞ்சையில் திரண்ட கழகம்.. கோரிக்கை நிறைவேறாவிட்டால்” : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
‘இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?’ : தவெக-வின் அட்டூழியத்தை அடுக்கி கேள்வி எழுப்பிய முரசொலி!
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!
-
தமிழ்நாட்டு விவசாயிகள் நாக்பூரில் கைது.. நடுவழியில் ரயிலில் இருந்து இறக்கம் : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!