M K Stalin
“வருவாயை ஈட்ட, மக்கள் மீது பழிப்போடுவதா?” - டாஸ்மாக் திறப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உயர்ந்த நிலையில், நேற்று 527 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டது உறுதியானது. சென்னையில் மட்டுமே 266 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு, மே 7ம் தேதி முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்திருப்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
“தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 500-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாநில அரசிடமிருந்து பேரிடர் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்பு வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மே 7-ம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தைவிட குறைவான நோய்த் தொற்று உள்ள அண்டை மாநிலங்களின் எல்லையில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குவிகிறார்கள் என மக்கள் மீது பழிபோட்டு, ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை சரிசெய்யும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது நியாயமானதல்ல!
மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி பங்கு, நிதிக் கமிஷன் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு நிலுவைத் தொகைகளை, உரிமையுடனும் துணிவுடனும் வலியுறுத்திப் பெற்று வருவாய் இழப்பை சரிசெய்ய வேண்டிய அ.தி.மு.க அரசு, ஊரடங்கு காலத்தில் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கான சூழலை உருவாக்குவது, நோய்த் தொற்றை அதிகரிக்கவே செய்யும். ஆளுமையும் அக்கறையும் உள்ள எந்த ஓர் அரசும் இப்படிப்பட்ட அபாயகரமான நடவடிக்கையை மேற்கொள்ளாது.” என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
Also Read
-
ரூ.5,980 கோடி முதலீட்டில் 8,400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!
-
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது : M.N.ராஜம், S.P.முத்துராமன் ஆகியோருக்கு வழங்கினார் CM MK Stalin!
-
“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை ஏழை பெண்களுக்கு எதிரானதாகும்” : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
மும்பையில் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்: நீதி கேட்கும் பெற்றோர் - நடந்தது என்ன?
-
“அ.தி.மு.க - பா.ஜ.க.வின் டெபாசிட்டுக்கு ஆபத்து வந்துவிட்டது! பரிதாபமாக இருக்கிறது!” : முரசொலி தலையங்கம்!