M K Stalin

“இசையுலகின் கதாநாயகனாக திகழ்ந்தவர் ‘லக்‌ஷ்மண் ஸ்ருதி’ ராமன்” - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பிரபல லக்‌ஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவின் உரிமையாளர் ராமன் சென்னை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். வெகுநாட்களாக இருந்த உடல்நலக் குறைவு காரணமாக ராமன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

அவரது மறைவு செய்தியறிந்து திரையுலகினர், பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ராமனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “இசையுலகின் கதாநாயகனாகத் திகழ்ந்து, மக்கள் மனம் கவர்ந்த லட்சுமண் ஸ்ருதி இசைக்குழுவின் உரிமையாளர் ராமனின் எதிர்பாராத மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது திடீர் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இசை ரசிகர்களை மீளா அதிர்ச்சியிலும், தாங்கமுடியாத வேதனையிலும் ஆழ்த்தியுள்ள அவரது மரணம் இசை உலகிற்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு. மேடைக் கச்சேரிகளில் தனி முத்திரை பதித்த அவர், 10,000-த்திற்கும் மேற்பட்ட இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.

1987-இல் சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்ட "லட்சுமண் ஸ்ருதி" தமிழகம் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் தமிழ் இசைக்காக ஆற்றிய தனித்துவமிக்க சேவை, மனதை குளிர்விக்கும் கச்சேரிகள் உலக அளவில் உள்ள ரசிகர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது .

எத்தனையோ கழக நிகழ்ச்சிகளுக்கு துணைபுரிந்த லட்சுமண் ஸ்ருதி ராமன் அவர்களின் மறைவு திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற அரசியல் பேரியக்கங்களுக்கும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இசையுலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.