M K Stalin
4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள்: நேரில் சென்று கோரிக்கைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளிலும் அரசு மருத்துவர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் பேரணி நடத்திய மருத்துவர்கள், தமிழக அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அவசர சிகிச்சையையும் புறக்கணிக்கப் போவதாகத் எச்சரித்தனர். இதேபோல், சேலம் அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் இன்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அரசு மருத்துவனையில் உள்ள நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும், 5 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டதால் தங்களுடைய நான்கு அம்சக் கோரிக்கைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு எட்டப்படும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது, அவருடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ”அரசு மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானது. நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த பிரச்னையை தீர்க்காதது வருத்தமளிக்கிறது. முதலமைச்சர் பழனிசாமி இந்த விவகாரத்தில் தலையிட்டு மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்." என வலியுறுத்தினார்.
மேலும், மருத்துவர்களும் தங்களது உடல் நலனை பாதிக்காதவாறு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தி.மு.க சார்பில் கேட்டுக்கொண்டார்.
Also Read
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!
-
குழந்தைகளின் கல்விக்கு உதவும் உரிமைத் தொகை : முதலமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் சொன்ன மேகலா என்ற பெண் !
-
எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தியா?: பாஜக அமைச்சர் அட்ராசிட்டியால் விழிப்பிதுங்கிய பெண் காவலர்-பின்னணி?
-
ஓமன் நாட்டில் பணிபுரிய அறிய வாய்ப்பு... சம்பளம் எவ்வளவு? என்ன பணி? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம் உள்ளே!
-
“திட்டத்தை முடக்க நினைத்தவரின் சதியை முறியடித்த முதலமைச்சர்...” - முரசொலி பாராட்டு!