M K Stalin

ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி கொள்ளையடித்து வருகிறது அ.தி.மு.க அரசு : நாங்குநேரியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களிடையே உரையாற்றும் போது தமிழகத்தில் நடைபெறும் அ.தி.மு.க-வின் அக்கிரம, அநியாய ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என பேசியுள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கிய மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடம்போடுவாழ்வு கிராமத்தில் திண்ணைப் பிரசாரம் மேற்கொண்ட அவர், அ.தி.மு.க அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படாமல் உள்ளது என்றார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என தெரிவித்தார்.

மேலும், தற்போதுள்ள அ.தி.மு.க ஆட்சியாளர்கள் ஜெயலலிதாவின் பெயரை முன்வைத்து மக்களை ஏமாற்றி அரசு கஜானாவை சுரண்டி வருகின்றனர் என்றார்.

இதைத் தொடர்ந்து சவளைக்காரன்குளத்தில் மக்களிடையே பேசிய மு.க.ஸ்டாலின் பா.ஜ.க-வின் மறைமுக ஆட்சியே தமிழகத்தில் அ.தி.மு.க மூலம் நடைபெற்று வருகிறது, என்று விமர்சித்தார். நாம் உண்ணும் உணவுக்கும், பேசும் மொழிக்கும் டெல்லியில் இருந்தே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது என மோடி அரசை சாடினார்.

இந்த பிரசாரத்தின் போது, தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.