M K Stalin

“பா.ஜ.க காலூன்றக் கூட முடியாத தீர்ப்பை மக்கள் கொடுத்துள்ளனர்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து ஏர்வாடி, திருக்குறுங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ''இஸ்லாமியர்களுக்கு திமுக காலத்தில் 3.5% இட ஒதுக்கீட்டை வழங்கியது. முத்தலாக் சட்டத்தை கடுமையாக எதிர்த்த இயக்கம் தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி நடக்கவில்லை காட்சி தான் நடக்கிறது.

கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது நீட் வரவில்லை.அவர்கள் இல்லாத நிலையில்.நீட் தமிழகத்தில் புகுந்துள்ளது. நீட் வேண்டாம் என தொடர்ந்து குரல் கொடுத்து சட்டமன்றத்தில் 2 மசோதக்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாக்கள் என்னவானது என்றே தெரியவில்லை. அந்த சட்டம் நிறைவேற்றமுடியாது என திருப்பி அனுப்பபட்டதாக செய்தி வந்துள்ளது.

ஹிந்தி, சமஸ்கிருதம் தமிழகத்தில் திணிக்க நினைக்கிறார்கள். தபால் நிலையம்,ரயில் நிலையம்,மத்திய அரசு அலுவலகத்தில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டது.அதனை எதிர்த்து தி.மு.க போராடி தடுத்து வைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 31 அமைச்சர்களும் ஆட்சியை பயன்படுத்தி கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள். இனி நடக்கும் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறாத நிலையில் தான் அ.தி.மு.க ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க கொண்டுவரும் கொடுமையான சட்டத்தை எல்லாம் மெளனமாக செயல்படுத்துகிறது.

பா.ஜ.க.வுடன் கூட்டு களவானியாக அ.தி.மு.க செயல்படுகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணியில்லை என சொன்னவர் ஜெயலலிதா. ஆனால் அவரது படத்தை வைத்துகொண்டு பா.ஜ.க.வுடன் கூட்டு வைத்துள்ளனர். ஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜ.க.வுடன் கூட்டணியை அ.தி.மு.க வைத்திருக்காது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மக்கள் பிரச்சனைகளுக்காக மக்களை சந்தித்ததில்லை. ஆட்சியில் அனைத்திலும் லஞ்சம். இவர்கள் ஆட்சியை பா.ஜ.க.தான் காத்துகொண்டிருக்கிறது. நடப்பது அ.தி.மு.க ஆட்சி என ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். அனால், தமிழகத்தில் நடப்பது பா.ஜ.க ஆட்சி.

ரூபி மனோகரன் இராணுவ வீரர் தொகுதிக்கான திட்டங்களை கட்டுபாட்டுடன் செயல்படுத்துவார். ரானுவத்தில் இருந்தவர் வேட்பாளர் தற்போது நாங்குநேரியை காக்க வந்துள்ளார். அ.தி.மு.க வேட்பாளர் மீது பல மோசடி வழக்குகள் உள்ளது.

மத்தியில் மிருகபலத்துடன் பா.ஜ.க ஆட்சி அமைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க இதுவரை கால் இல்லை கைகூட ஊன்ற முடியாத அளவில் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பை தந்துள்ளனர்.

தமிழகத்தில் ஊழல் தலைவிரித்து ஆடி வருகிறது. அ.தி.மு.க.வினர் அடிமையாக இருக்கின்றனர் என்பதாலேயே இந்த ஆட்சியை விட்டு வைத்திருக்கின்றனர். மத்திய மாநில அரசுக்கு பாடம் புகட்ட இந்த இடைத்தேர்தலை பயன்படுத்தவேண்டும்.

தமிழகத்திற்க்கான உரிமைகளை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் விட்டுகொடுத்ததில்லை. ஆனால் அவர்கள் பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் பா.ஜ.க.வுக்கு கைகூலியாக செயல்படுகின்றனர். இதனை எதிர்த்து கேள்விகேட்டால் அ.தி.மு.க அமைச்சர்கள் சிறை சென்றுவிடுவார்கள்.

நம்பியாறு கருமேனியாறு தாமிரபரணி அறுகளை இணைத்து வரண்ட பகுதிகளை செலுமையாக்க தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் அ.தி.மு.க ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டது.

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம்,கங்கைகொண்டான் தொழில் நுட்ப பூங்கா திட்டங்கள் செயல்படுத்தபட்டால் பல ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். தி.மு.க ஆட்சியில் இல்லாத நிலையில் கூட அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று குறைகளை கேட்டு வருகிறது'' எனத் தெரிவித்தார்.