M K Stalin

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஓராண்டு நினைவு தினம்: 3000 போலீசார் பாதுகாப்பு பணி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22-ல் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கல்லூரி மாணவி ஸ்னோலின் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுக்கு கண்டனங்கள் குவிந்தன. துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அந்த நினைவு தினத்தை ஒட்டி, வரும் 22-ம்தேதி நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மே 9ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தூத்துக்குடி பெல் ஓட்டலில் காலை 9 மணி முதல் 11 ஆம் தேதி வரை கூட்டம் நடத்த அனுமதி வழங்கினர். முதலில் 250 பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது, பின்னர் 500 பேர் கலந்து கொள்ளலாம் உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்ட படி நாளை நடைபெறுகிறது. இதனால் பெல் ஓட்டலில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.