M K Stalin

புகழூரில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்: அரவக்குறிச்சியில் மு.க.ஸ்டாலின் உறுதி

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்.,18 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மே 19ம் தேதி அன்று தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் பகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மே 1ம் தேதி முதல் 4 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று அரவக்குறிச்சியில் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டார்.

அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட தவுட்டுபாளையம், புகழூர் பகுதியில் இன்று காலை தனது பிரசாரத்தை மேற்கொண்டார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது வருகைக்கு வழி நெடுகிலும் மக்கள் ஆரவாரமாக வரவேற்பு அளித்து மகிழ்வித்தனர்.

தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து அரவக்குறிச்சியில் வாக்குச் சேகரிக்க நடைபயணமாக சென்ற போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இளம்பெண்கள் மற்றும் பொது மக்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

புகழூர் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் இன்று காலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், கழக வேட்பாளர் செந்தில் பாலாஜியும் தேநீர் அருந்தினர்.

அரவக்குறிச்சியில் உள்ள புகழூர் பகுதி வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகளுடன் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, தி.மு.க. தலைவரிடம் தங்களது குறைகளை விவசாயிகள் எடுத்துரைத்தனர்.

வெற்றிலை விவசாயிகளுடன் கலந்துரையாடிய மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், புகழூரில் உள்ள காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்றும், வெற்றிலை ஆராய்சி மையம் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.