M K Stalin

மோடியை பாசிஸ்ட் என கூறுவதில் என்ன தவறு? - மு.க.ஸ்டாலின்  

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இன்று தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;

ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் என்றும் மக்களுக்காக உழைக்கும் கட்சி தி.மு.க.தலைவர் கலைஞர், இந்நேரம் இருந்திருந்தால் தங்கை கனிமொழியை ஆதரித்து பிரசாரம் செய்திருப்பார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து அமைதியான முறையில் போராடிய மக்களை ஓடவிட்டு சுட்டுத்தள்ளி இருக்கிறது எடப்பாடி அரசு.வாங்கிய கூலிக்காக எடப்பாடி இந்த கொலைகளை செய்துள்ளார்.13 பேர் பலியானதற்கு காரணமானவர்கள் இந்த தேர்தலில் தண்டிக்கப் பட வேண்டும்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13பேர் இறந்துபோனது தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை இரங்கல் தெரிவித்தாரா?தமிழகத்தில் நடந்த கொடூரம் தொடர்பாக வாய் திறக்காத மோடியை பாசிஸ்ட் என கூறுவதில் என்ன தவறு?

பாசிஸ்ட் பா.ஜ.க என்கிற வார்த்தை முதன் முதலில் இந்த தூத்துக்குடி மண்ணில் இருந்துதான் வந்தது.தோற்பதற்காகவே தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ள பாஜகவின் வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எனது அனுதாபங்கள்.

பா.ஜ.க. செல்வாக்கு மிக்க மாநிலங்களில்தான் கலவரங்கள் அதிகமாக நடந்துள்ளன.தமிழ்நாட்டையும் கலவர பூமியாக்க முயற்சிக்கின்றனர்.ஆனால் திராவிட இயக்கங்கள் இருக்கும் வரை அது ஒரு போதும் நடக்காது.நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ஹீரோ; பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நிரந்தர சட்டம் இயற்றப்பட்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும், துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் உயிரிழக்க காரணமான காவல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம், அணுமின் திட்டங்கள் மாவட்ட மக்களின் அனுமதி பெற்றே நிறைவேற்றப்படும். மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும்.

எடப்பாடி அரசை தூக்கி எறிய வரும் 18-ஆம் தேதி தமிழக மக்கள் பன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்