India

நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!

மருத்துவக் கல்விக்கான “நீட்” தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வால் மாணவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்தாண்டு நடைபெறவிருந்த நீட் தேர்வில் மீண்டும் வினாத்தாள் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் பலர் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், இதுவரை 9க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்து கடும் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், நீட் மோசடியில் தேசிய தேர்வு முகமைக்கும் (NTA) நேரடி தொடர்பு இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நீட் கேள்வித்தாளை தயாரித்ததாக கூறப்படும் 2 விரிவுரையாளர்களை சி.பி.ஐ கைது செய்துள்ளது.

இதையடுத்து, ஐக்கிய மருத்துவர்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை முறையாக நடத்த தவறிவிட்டது. 2024 முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேசிய தேர்வு முகமை ஒன்றிய அரசின் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்றும், சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல், தேசிய தேர்வு முகமை கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் மட்டுமே செயல்படுவதால், அது நாடாளுமன்றத்திற்கு நேரடியாக பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்றும், கணக்காய்வாளர் மற்றும் தலைமை தணிக்கையாளர் (CAG) தணிக்கைக்கும் உட்பட்டதல்ல என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத தேசிய தேர்வு முகமையை கலைக்க உத்தரவிட வேண்டும் என்றும், நீட் மறுதேர்வை உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், மறுதேர்விலும் மீண்டும் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது” என்றும் அந்த மனுவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Also Read: “நீட் எனும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி எப்போது?” : முரசொலி தலையங்கம் கேள்வி!