India

வன்முறை வெடித்து 29 மாதங்களுக்குப் பிறகு மணிப்பூர் செல்லும் மோடி : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையே கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக மோதல்போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் இன்னும் தொடர்கிறது.

இந்த வன்முறையால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டும், அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி முகாம்களில் வாழ்க்கை நடத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது.

மணிப்பூர் மாநிலம் இப்படி இருக்க, அங்கு ஒருமுறை கூட சென்று அமைதியை திரும்ப பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்திற்கு நாளை பிரதமர் மோடி செல்கிறார்.

இதையடுத்து, பிரதமர் மோடியின் மணிப்பூர் வருகையை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்தற்கு நாளை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், ஆனால், அம்மாநிலத்தில் அவர் வெறும் 3 மணிநேரம் மட்டுமே செலவிடுவார் என தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு அவசரமான பயணத்தால், பிரதமர் மோடி என்ன சாதிக்க உள்ளார் என்றும் அவர் வினவியுள்ளார். 29 மாதங்களாக, பிரதமர் மோடிக்காக காத்திருந்த மக்களுக்கு இது ஒரு அவமானம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 13 ஆம் தேதி உண்மையில் பிரதமரின் வருகை இல்லாத நாளாக இருக்கும் என்றும், மணிப்பூர் மக்கள் மீதான தனது இரக்கமற்ற தன்மையை அவர் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.

Also Read: நேபாளம் மீண்டும் எரிகிறது - இந்த போராட்டம் ஜனநாயகத்தை நோக்கியதாக அமைய வேண்டும் : முரசொலி!