India
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவு தளம் குறித்த முக்கிய கேள்விகளை தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. ஆகஸ்டு 20 ஆம் தேதி எழுப்பினார்.
“குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளத்தினுடைய உள்கட்டமைப்பு மேம்பாட்டின் தற்போதைய நிலை என்ன? இந்த விண்வெளி ஏவுதளம் முழுமையாக செயல்பாட்டுக்கு வருவதற்கான கால நிர்ணயம் என்ன? இந்தத் திட்டத்திற்காக இதுவரை ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி எவ்வளவு?
விண்கலம், செயற்கைக்கோள் அல்லது ஏவுதள வாகனத்தின் சுமந்து செல்லும் திறன் (சரக்கு அல்லது உபகரணங்களைக் குறிக்கும்) PAYLOAD மற்றும் ஏவுதள வசதி ஆகிய அம்சங்களில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்துடன் ஒப்பிடும்போது குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தின் சிறப்பு என்ன?
குலசேகரப்பட்டினம் ஏவு தளத்தில் இருந்து அடுத்து ஏவப்பட இருக்கிற ராக்கெட் உள்ளிட்ட விண்வெளித் பயணத் திட்ட விவரங்கள் என்ன?” என்று கனிமொழி எம்.பி. கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்விகளுக்கு பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,
“குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவு தளத்தின் உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை, கிழக்கு - கடற்கரை சாலைக்கு மாற்றுப் பாதையாக கையகப்படுத்தப் படவேண்டிய நிலம் தவிர மற்ற நில கையகப்படுத்துதல் பணிகள் பூர்த்தியாகிவிட்டன.
ஏவு தள மேம்பாட்டுப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன. பல்வேறு உபகரணங்கள் உற்பத்தி, கட்டமைப்புப் பணிகள் வெவ்வேறு மையங்களில் நடந்துகொண்டிக்கின்றன.
குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளத்தை 2026-27 நிதியாண்டில் முழுமையாக இயக்கத் தொடங்குவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளத்துக்காக மொத்தம் 985.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் 2025 ஜூலை 31 ஆம் தேதி நிலவரப்படி 389.58 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்துடன் ஒப்பிட்டால்… ISRO வின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வாகனமான ‘SSLV’ செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்களின் சுமந்து செல்லும் திறனை மேம்படுத்தும். அதே நேரத்தில் துருவ சுற்றுப்பாதைகளுக்கு செயற்கைக்கோள்களை ஏவிட குலசேகரப்பட்டினம் ஏவுதளம் உதவியாக இருக்கும்.
மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செயல்பாட்டு ரீதியான விதிவிலக்கான, சூரியனுடன் ஒத்திசைவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட வகையான துருவ சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்போது… நிலப்பகுதிகளில் செலவழிக்கப்படும் நிலைகளின் தாக்கத்தால், ராக்கெட் திசைமாறும் விகிதத்திலும் நிலைப்புத் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் ராக்கெட்டின் சுமை தாங்கும் திறன் (PAYLOAD) கணிசமாகக் குறைகிறது.
குலசேகரப்பட்டினத்திலிருந்து ஏவப்படும் போது SSLV-யின் சுமைதாங்கும் திறன் சுமார் 300 கிலோ ஆகும். அதேசமயம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும்போது சுமைதாங்கு திறன் போதுமானதாக இல்லை.
குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, அரசு சாரா நிறுவனங்களிலிருந்து SSLV மற்றும் அதற்கு சமமான நிலையிலான Small Satellite Launch Vehicle சிறிய செயற்கைக் கோள்களை ஏவும் விண்கலங்களை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது” என பதிலளித்துள்ளார்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?