India

அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம் (போயிங் 787-8) ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

அகமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.தரையில் இருந்து 425 அடி உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்து விபத்துக்குள்ளானது.

நாட்டை உலுக்கிய இக்கோர விபத்தில், விமானத்தில் இருந்த 241 பேர் உள்பட 260 பேர் பலியாகினர். இந்த விபத்தில் விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக 15 பக்க முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) நாடாளுமன்ற குழுவிடம் சமர்ப்பித்தது.

அதன் தகவவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், விமானம் கிளம்பிய சில நொடிகளிலேயே இன்ஜின்களுக்குச் செல்ல வேண்டிய எரிவாயு நின்றதால் இரண்டு இன்ஜின்களும் செயல்பாட்டை இழந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், விமானம் கிளம்பிய ஒரு நொடியிலேயே, இன்ஜினுக்குப் போக வேண்டிய எரிவாயு 'RUN'-ல் இருந்து 'CUTOFF'-ற்குச் சென்றுள்ளது. இது விமானிகள் தங்களுக்குள் பேசிய பேச்சுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு விமானிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், "அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்திற்கு விமானிகள்தான் காரணம் என்ற தொனியில் வெளியாகி உள்ள முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்க முடியாது. இந்த விசாரணை குழுவில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள், விமானிகள் யாரும் இடம்பெறவில்லை. இந்த விபத்து குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!