India

நகைகளின் மதிப்புக்கு 85% வரை கடன் வழங்கலாம்... கடும் எதிர்ப்பு காரணமாக நிபந்தனைகளை தளர்த்தியது RBI !

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் அடகு வைக்கும் நகைகளின் மதிப்பில் 75 % வரை மட்டுமே கடன் வழங்கப்படும் என்று சமீபத்தில் நிபந்தனைகளை விதித்தது ரிசர்வ் வங்கி. அதோடு தங்க நகைக்களை அடகு வைப்பவர்கள் அதற்குரிய ரசீதினை வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இது குறித்து ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், ரூ.2.5 லட்சம் வரையிலான தங்க நகை கடன்களுக்கு, நகைகளின் மதிப்புக்கு 85% வரை கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி தனது நிபந்தனைகளை தளர்த்தியுள்ளது.

இது குறித்து, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வு வங்கி விதிமுறைகளை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

இப்பிரச்சனை சம்பந்தமாக ஒன்றிய நிதியமைச்சரிடம் நேரில் சந்தித்து தந்த கடிதத்தின் பல அம்சங்கள் ஈடேறி உள்ளன என்பது மகிழ்ச்சி. ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நான் எழுதிய கடிதத்திற்கும் எனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக பதில் வந்தது. இப்பொழுது ரிசர்வு வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எமது கோரிக்கைகள்;

1. தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும். நகைக்கான ரசீது தேவையில்லை.

2. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன்-பிணை மதிப்பு (Loan to Value) விகிதம் 85% ஆக உயர்த்தப்படும்.

3. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.

4. முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை.

இது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும். முழுமையான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.அவற்றை ஆராய்ந்து கூடுதல் தகவல்கள் மற்றும் கோரிக்கைகளை பகிர்ந்து கொள்வேன்"என்று கூறியுள்ளார்.

Also Read: மேட்ச் பிக்சிங் செய்து தேர்தலில் பா.ஜ.க எப்படி முறைகேடு செய்கிறது? : மோடியின் முகத்திரையை கிழித்த ராகுல்!