India

சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு உலக சுற்றுச்சூழல் சிறப்பு விருது! : போக்குவரத்து துறையில் புதிய சாதனை!

புது டெல்லியில் உள்ள Roseate House ஏரோசிட்டியில், உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (Global Energy and Environment Foundation - GEEF) ஏற்பாடு செய்த, உலக எரிசக்தி தலைவர்கள் மாநாட்டில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 2025-ஆம் ஆண்டுக்கான "உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம்" என்னும்   உயரிய விருதைப் பெற்றுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் டாக்டர் ராஜீவ் கே. ஸ்ரீவஸ்தவா, இந்த விருதினை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், அவர்கள்  உடன் இருந்தனர்.

ஆண்டுதோறும் வழங்கப்படும் உலக சுற்றுச்சூழல் சிறப்பு விருது, மாற்றத்தை உருவாக்கி, அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவும் மிகச்சிறந்த நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் அவர்களின் குழுக்களை கௌரவிக்கிறது.

அவ்வகையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் , காற்றின் தரத்தை மேம்படுத்துதல், வளப் பாதுகாப்பு, சூரிய மின்சக்தி பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல்  ரீதியான பசுமையான தோட்டங்களை வளர்த்து சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல் போன்ற  முயற்சிகளுக்காக தனித்து நிற்கிறது.

இந்த விருதை பெற்ற ஒரே மெட்ரோ நிறுவனம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஆகும். கடந்த ஆண்டு,  சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உலகளாவிய நிலைத்தன்மை விருது 2024-ல் தங்கம் வென்றுள்ளது.

Also Read: தொழில்முனைவோர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உதவும் ’முதல்வர் படைப்பகம்’ : Hindustan Times பாராட்டு!