India
”தி.மு.க முன்னெடுக்கும் போராட்டத்திற்கு சமாஜ்வாதி துணை நிற்கும்” : டெல்லியில் அகிலேஷ் உறுதி!
மாநில அரசுகளினால் கட்டமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிற பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமையை ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஆளுநர்களுக்கு வழங்கும் வரையறைகளை உள்ளடக்கிய யுஜிசி வரைவு நெறிமுறைகள், மாநில அரசின் உரிமை பறிப்பு நடவடிக்கையாக அமைந்துள்ளது.
யுஜிசி வெளியிட்டுள்ள இந்த வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தி.மு.க மாணவர் அணி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று தி.மு.க மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ”தமிழ் மக்களுக்கு 4000 வருட வரலாறு இருக்கிறது. தொன்மையான மொழியும் பண்பாடும் இருக்கிறது. யுஜிசி புதிய நெறிமுறைகள் வெறும் கல்வி சம்பந்தப்பட்டது அல்ல. அது உங்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் மீது ஆர்எஸ்எஸ் தொடுக்கும் தாக்குதல். பிற பண்பாடுகளையும் வரலாறுகளையும் அழித்து ஒற்றைத் தன்மையை திணிப்பதுதான் ஆர்எஸ்எஸின் லட்சியம். ஆர்எஸ்எஸ்ஸின் காலாவதியான சித்தாந்தம் திணிக்கப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
அதேபோல் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் எம்.பி, ”கல்வி உரிமைக்காக, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது. புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து பல போராட்டங்களை திமுக முன்னெடுத்து வருகிறது. அத்தனைப் போராட்டங்களையும் திமுகவுடன் சமாஜ்வாதி கட்சி துணை நிற்கும்” என பேசினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP பேசும்போது, ”ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். UGC-யின் வரை முறைகள் அகற்றப்பட வேண்டும். கல்வியாளர்கள் மட்டுமே குழுவில் இடம் பெற வேண்டும். அப்போதுதான் கல்வித்துறை பாதுகாக்கப்படும். திமுக மாணவர் அணி கையில் எடுத்துள்ள இந்தப் போராட்டம் வெற்றி பெறும்.” என கூறினார்.
இந்தப் போராட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர்.
Also Read
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!
-
தொகுதி மறுவரையறை : தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!
-
மகளிர் இடஒதுக்கீட்டுடன், தொகுதி மறுவரையறை... பாஜகவின் பகிரங்க திட்டத்தை அம்பலப்படுத்திய முதலமைச்சர்!