India

”பெரும்பான்மையினரின் விருப்பப்படிதான் இந்தியா இயங்கும்” : அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சர்ச்சை பேச்சு!

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் சேகர் குமார் யாதவ். இவர், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு கருத்துக்களை பரப்பி வரும் விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்று, இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரான வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தில் நீதிபதி சேகர் குமார் யாதவ், பேசிய கருத்துக்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், ”நம்முடைய குழந்தைகள் சிறு வயதிலேயே வேதங்கள் படித்து, ஸ்லோகங்கள் சொல்லி அகிம்சை முறையில் வளர்க்கப்படுகின்றனர். ஆனால் அவர்களின் குழந்தைகள், கசாப்புக் கடைகளில் விலங்குகள் வெட்டப்படுவதை பார்த்து வளருகின்றனர். அவர்கள் சகிப்புத்தன்மையோடு இருப்பார்களேன நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?.

இது இந்துஸ்தான். இங்கு வாழும் பெரும்பான்மையினரின் விருப்பப்படி இந்த நாடு செயல்படும். இதுதான் சட்டம். பசு, கீதை மற்றும் கங்கை ஆகியவை கலாச்சாரத்தை வரையறுக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் ஹர்பலா தேவியின் சிலை உள்ளது, ஒவ்வொரு குழந்தையும் ராமர் - அதுதான் எனது நாடு.

நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும், ஒரு தொழிலதிபராக இருந்தாலும் அல்லது ஒரு மாணவராக இருந்தாலும் சரி, இந்து என்ற உங்கள் அடையாளம் முதலில் வருகிறது. இந்த மண்ணை தன் தாயையும், தன்னையும் அதன் குழந்தையாகக் கருதும் எவரும் இந்துக்களே. இந்த நாட்டை உலகத் தலைவராக மாற்றும் ஆற்றல் ஒரு இந்துவுக்கு மட்டுமே உண்டு என்றும், வேறு யாராலும் அவ்வாறு செய்ய முடியாது என்றும் விவேகானந்தர் நம்பினார். இந்த அபிலாஷையை ஒருபோதும் மங்க விடாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த வெறுப்பு பேச்சுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

Also Read: சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் முடங்கிய IRCTC இணையதள சேவை : பாதிக்கப்பட்ட பொதுமக்கள் !