India
“எந்த மதமும் மாசுபாட்டை ஏற்படுத்த சொல்லவில்லை; பட்டாசுக்கு நிரந்தர தடையா?” -சுப்ரீம் கோர்ட் கூறுவது என்ன?
டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும், மக்கள் பலரது வாகன போக்குவரத்து காரணமாகவே காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதிலும் அண்மைக்காலமாக இந்த பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதன்காரணமாக நடந்து முடிந்த தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்கவோ, வெடிக்கவோ கூடாது என்று தடை விதித்தது டெல்லி அரசு. குறிப்பாக பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது என்று வரும் ஜனவரி 1, 2025 வரை தடை விதித்துள்ளது டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம். மேலும் உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டாசுக்கு நிரந்தரத் தடை விதிப்பது குறித்து நவம்பர் 25ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு நேற்று (நவ.11) உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்படி, மாசு இல்லாத சூழலில் வாழ்வதற்கான உரிமை அடிப்படை உரிமையாகும். எந்தவொரு மதமும் மாசுவை உருவாக்கும் எந்த செயலையும் ஊக்குவிப்பதில்லை என்பதே எங்கள் கருத்து. பட்டாசுகளால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கிறது.
டெல்லியில் காற்று மாசு என்பது ஆண்டு முழுவதும் பெரிய பிரச்னையாக இருக்கும்போது, குறிப்பிட்ட மாதங்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்படுகிறது? அக்டோபர் 14-ம் தேதி டெல்லி அரசு பிறப்பித்த பட்டாசு தடையை அமல்படுத்த சிறப்புப் பிரிவை உருவாக்க வேண்டும். மேலும், இந்த தடை குறித்து அனைத்து பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து நவ.25-ம் தேதிக்குள் டெல்லி போலீஸ் கமிஷனர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
அதோடு ஆன்லைன் பட்டாசு விற்பனையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அளிக்க வேண்டும். பட்டாசு தடையை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக சிறப்புப் பிரிவை அமைக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம். தடையை அமல்படுத்துவதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கைகளைப் பதிவு செய்து தனிப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடுகிறோம்” என்றனர்.
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், “டெல்லியில் காற்று மாசு பண்டிகைக் காலங்களில் மேலும் அதிகரிப்பதால் அந்த மாதங்களில் மட்டுமே இப்போது கவனம் செலுத்தப்படுகிறது.” என்றார். இருப்பினும், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “பட்டாசு வெடிக்க நிரந்தர தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்படிருக்கிறது. ஆனால் தேர்தல், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதற்காக இதுபோன்ற விதிவிலக்கு?
பட்டாசு விற்பனைக்கும் போலீஸ், உரிமம் அளிக்கிறது. மாநிலத்தில் பட்டாசு வெடிக்க முழு தடை இருக்கும் போது இதுபோன்ற உரிமங்களை அனுமதிக்கக் கூடாது. பட்டாசுகளை வெடிப்பதில் தங்களின் அடிப்படை உரிமை என யாரேனும் உரிமை கோர விரும்பினால், அவர்கள் நீதிமன்றத்திற்கு வரட்டும்! தீபாவளிக்கு மட்டுமின்றி, பட்டாசுகளுக்கு முழுமையாக எப்போதும் தடை விதிக்க வேண்டும்.” என்றனர்.
Also Read
-
“த.வெ.க அரசு காப்பி பேஸ்ட் அரசு ; ஆளுநர் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” : உதயநிதி ஸ்டாலின் முழு பேட்டி!
-
திருவாரூரில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் : த.வெ.க ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது!
-
வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 5 சவரன் நகை பறிப்பு: எடப்பாடியில் பரபரப்பு!
-
“கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்கும் த.வெ.க அரசு” : தி.மு.க IT WING கண்டனம்!
-
“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!