India
“மணிப்பூர் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது... பிரதமர் இங்கு வர வேண்டும்..” - ராகுல் காந்தி எம்.பி. வேண்டுகோள் !
வடகிழக்கு பருவமழை காரணமாக வடக்கில் உள்ள பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, பல லட்சம் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 70-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த கோர நிகழ்வுக்கு பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் வெள்ளத்தில் சிக்கியவர்களையும் மீட்டு வருகின்றனர். இந்த சூழலில் காங்கிரஸ் எம்.பி-யும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அசாமில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க சென்றார்.
அவ்வாறு செல்லும் வழியில், அண்டை மாநிலமான மணிப்பூரிலும் சென்று மக்களுக்கு தங்கள் ஆறுதலை தெரிவித்தார். மணிப்பூரில் குக்கி-மெய்தி சமூக மக்களிடையே இருக்கும் பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை. தினமும் வன்முறை நடைபெற்று வருகிறது. வன்முறை குறைத்தாலும், மணிப்பூர் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
எனவே ராகுல் காந்தி மணிப்பூரின் ஜிரிபாம், சுராசந்த்பூர் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அங்கிருக்கும் மக்கள் அனைவரும் தங்கள் குறைகளை சொல்லி கதறி அழுதனர். மணிப்பூர் மக்களுக்கு காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் ஆதரவை தெரிவித்து, நிலைமை சரியாக செய்ய வேண்டிய உதவிகளை நிச்சயமாக செய்வதாகவும் ராகுல் வாக்குறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி மணிப்பூர் சென்று கட்டாயம் அங்கிருக்கும் மக்களை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "வன்முறை தொடங்கிய பிறகு 3-வது முறையாக நான் மணிப்பூர் வருகிறேன். இங்கே எதுவுமே மாறவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
மணிப்பூர் மக்களுக்கு அமைதி தேவை. அவர்களின் குரல்களை கேட்கவும், அவர்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கவும் வந்துள்ளேன். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும். ஒரு சகோதரன் என்ற அடிப்படையிலேயே மணிப்பூர் வந்துள்ளேன். இதனை அரசியலாக்கும் எண்ணம் எதுவும் இல்லை. வன்முறையும் வெறுப்பும் எதற்கும் தீர்வாக முடியாது.
மணிப்பூரில் அமைதி ஏற்பட எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் என்ன செய்ய முடியுமோ, அதனை செய்ய தயாராக உள்ளேன். மணிப்பூர் மக்களின் வலியை மோடி புரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடி மணிபூருக்கு வரவேண்டும். மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மணிப்பூர் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
மாநிலம் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இந்திய அரசும், தேசபக்தர்களாகக் கருதும் ஒவ்வொருவரும் மணிப்பூர் மக்களை அணுகி அரவணைக்க வேண்டும். மணிப்பூருக்கு அமைதியைக் கொண்டு வாருங்கள்." என்றார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!