India

தொலைக்காட்சியில் சித்தராமையா குறித்து அவதூறு : அர்னாப் கோஸ்வாமி மீது பாய்ந்த வழக்கு !

நாட்டில் பல்வேறு மீடியாக்கள் தங்கள் நடுநிலையை தவறி ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுகின்றன. அதில் முதன்மையாக திகழ்வது Republic டி.வி. இதன் தலைமை ஆசிரியராக அர்னாப் கோஸ்வாமி இருந்து வருகிறார். தனியார் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து பின்னர் தனியாக செய்தி தொலைக்காட்சியை தொடங்கிய இவர், பாஜக ஆதரவு செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.

Godi Media என்று அழைக்கப்படும் சில தொலைக்காட்சிகளில், இதுவும் அடங்கும். ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவு கொடுப்பது மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளும் பற்றியும் அவதூறு பரப்பி வருகிறது இந்த Godi Media. இதனாலே இந்தியா கூட்டணி இந்த செய்தி தொலைக்காட்சிகளை புறக்கணித்துள்ளது. இந்த சூழலில் தற்போது போலியான செய்தியை Republic கன்னட டி.வி வெளியிட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று Republic கன்னட டி.வி-யில் ஒளிபரப்பான நேரடி நிகழ்ச்சியில் வீடியோ ஒன்று ஒளிபரப்பானது. அந்த வீடியோவில், சித்தராமையாவின் வாகனம் செல்வதற்காக எம்.ஜி.ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக செய்தி வெளியானது. மேலும், விரைந்து செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் செல்ல முடியாமல் தவித்ததாகவும் செய்திகள் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

ஆனால் இந்த நேரத்தில் முதல்வர் சித்தராமையா, பெங்களூருவில் இல்லை என்றும், அவர் அந்த நேரத்தில் அலுவல் நிமித்தமாக மைசூருவில் இருந்ததாகவும் காங்கிரஸ் விளக்கம் அளித்தது. மேலும் பொய்யான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜக ஆதரவு ஊடகம் முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகியான ரவீந்திரா என்பவர், இதுகுறித்து Republic டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் Republic கன்னட டிவி ஆசிரியர் நிரஞ்சன் ஆகியோர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் அவர்கள் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மீது இதுபோன்ற அவதூறு நிகழ்வுகள் அரங்கேறி வருவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “தேர்தல் ஆணையம், பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளது” - அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம் !