India

JNU மாணவர் சங்கத் தேர்தல் : இடதுசாரி அணி மகத்தான வெற்றி - மண்ணை கவ்விய பா.ஜ.கவின் ABVP!

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு கடந்த 2019ம் ஆண்டு மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா தொற்று போன்ற காரணங்களால் தேர்தல் நடைபெற வில்லை.

இதற்கிடையில் 2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்குள் சமூக விரோதிகள் சிலர் புகுந்து மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த ABVP மாணவர் அமைப்பிற்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதேபோல் JNU பல்கலைக்கழகம் எப்போதும் இடதுசாரிகளின் கோட்டையாகவும் அறிவுஜீவிகளின் வளாகமாகவும் இருந்து வருகிறது. இதை எப்படியாவது சிதைக்க வேண்டும் என ஒன்றிய பா.ஜ.க அரசு JNU பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளைச் செய்து வருகிறது.

இதை எதிர்ந்து தொடர்ச்சியாக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 22 ஆம் தேதி மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர் சங்கம் (SFI),அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (DSF) ஆகிய மாணவர் அமைப்புகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன.

தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இடதுசாரி கூட்டணியை எதிர்த்து பா.ஜ.கவின் ABVP மாணவர் அமைப்பு போட்டியிட்டது.

கடந்த 22 ஆம் தேதி பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் நான்கு இடங்களிலும் இடதுசாரி மாணவர் அணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இதில் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனஞ்சய் பாய் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை அடுத்து இடதுசாரி மாணவர் அமைப்பினர் நேற்று இரவு முழுவதும் கொண்டாடினர். நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு முன்னோட்டமாக இந்த JNU பல்கலைக்கழகம் மாணவர் சங்க தேர்தல் பார்க்கப்படுகிறது.

Also Read: JNU வன்முறை: இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை... தயாநிதி மாறன் கேள்விக்கு ஒன்றிய அரசு அதிர்ச்சி பதில்!