India

குதிரையில் ஊர்வலமாக வந்த மணமகன் : சாதி ரீதியாக விமர்சித்து மணமகனை அடித்த கும்பல் : குஜராத்தில் அதிர்ச்சி!

குஜராத் மாநிலத்தின் காந்திநகர் மாவட்டம், சடசனா கிராமத்தில் விகாஸ் சாவ்தா என்பவருக்கு திருமணமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்களின் ஏற்பாடு படி மணமகனை குதிரையில் ஏற்றி ஊர்வலமாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மணமகன் குதிரையில் ஏறி நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்களுடன் ஊர்வலமாக சென்றார். இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து ஊர்வலமாக சென்ற மணமகனை மறித்துள்ளனர்.

பின்னர், மணமகனை குதிரையில் இருந்து இறங்கக்கூறிய அவர்கள், மணமகன் இறங்கியதும் அவரின் கன்னத்தில் அடித்துள்ளனர். பின்னர் தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே குதிரையில் செல்ல வேண்டும், உங்கள் சமூகத்தினர் குதிரையில் செல்லக்கூடாது என்று கூறியுள்ளனர்.

இதன் காரணமாக மணமகன் உறவினர்களுக்கும், இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த நால்வருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மணமகன் குதிரையில் இருந்து இறங்கி வாகனம் ஒன்றில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

எனினும், இது குறித்து மணமகன் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலிஸார் குதிரையில் சென்றதற்காக தகராறு செய்த நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறைக்கு எதிராக தீர்மானம் : முதல் மாநிலமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழ்நாடு !