India

நடுரோட்டில் ஊடகவியலாளர் கார் கண்ணாடியை உடைத்த பாஜகவினர்... பாஜக கூட்டணி மாநிலத்தில் தொடரும் அவலம் !

மகாராஷ்டிராவில் பிரபல பத்திரிகையாளராக இருப்பவர்தான் நிகில் வாக்லே (Nikhil Wagle). ஊடகவியலாளரான இவர், ஆளும் ஒன்றிய பாஜக அரசின் பல ஊழல்கள் உள்ளிட்டவையை விமர்சித்து வந்துள்ளார். இதனால் பாஜக ஆதரவாளர்கள் அவ்வப்போது இவருக்கு மிரட்டல் விடுத்தும் வந்துள்ளார். இந்த சூழலில் தற்போது இவர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்த முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அப்போது அதில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த சூழலில் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுவது தெரிந்த விஷயம்தான் என்று பலரும் பலவித கருத்துகளை குறிப்பிட்டு விமர்சித்து வந்தனர்.

அந்த வகையில் ஊடகவியலாளர் நிகில் வாக்லேவும் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து விமர்சனத்தை முன்வைத்தார். மேலும் பாஜக ஆட்சி நடக்கும்போது, அந்த கட்சியின் மூத்த தலைவருக்கு பாரத் ரத்னா வழங்குவதை எப்படி ஏற்க முடியும்? எனும் வகையில் கேள்வியும் எழுப்பியதோடு, பிரதமர் மோடி மற்றும் எல்.கே.அத்வானியை விமர்சனம் செய்திருந்தார்.

ஊடகவியலாளர் நிகிலின் கருத்துக்கு பாஜகவினர் கண்டங்களை தெரிவித்து வந்த நிலையில், நேற்று இவர் மீது தாக்குதல் நடத்தவும் முயன்றுள்ளனர். அதாவது நிகில் வாக்லே, நேற்று இரவு தனது காரில் புனேவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவரது காரை மர்ம கும்பல் பின்தொடர்ந்து காரின் கண்ணாடிகளை உடைத்தனர்.

மேலும் காரை மொத்தமாக சுற்றி வளைத்துக்கொண்டு காரின் மேல் மையை ஊற்றினர். அதோடு மீண்டும் மீண்டும் கார் கண்ணாடியை உடைத்து தாக்குதல் நடத்தினர். இதில் திக்குமுக்காடிய நிகிலை, அருகில் இருந்த உத்தவ் தாக்கேரேவின் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் வந்து பாஜகவினரிடம் வாக்குவாதம் செய்து அவரை பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கண்டனங்களை எழுப்பியுள்ளது. விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்றும், அதற்கான எதிர்ப்பை இவ்வாறு வன்முறை மூலம் வெளிப்படுத்த கூடாது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Facebook Live-ல் சுட்டுக் கொல்லப்பட்ட சிவசேனா நிர்வாகி - பாஜக கூட்டணி ஆட்சியில் தொடரும் அவலம் !