India

இஸ்லாமிய கல்விச்சாலை இடிப்பு : உத்தராகாண்டில் வலுத்த வன்முறை!

உத்தராகாண்ட்டில் அமல்படுத்திய பொது சிவில் சட்டத்தின் வரையறை, தனி மனித உரிமையை குலைக்கும் வகையில் இருப்பதற்கு தேசிய அளவில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் சிறுபான்மையினரின் மத உணர்வுகளையும் சூரையாட முற்பட்டிருக்கிறது பா.ஜ.க அரசு.

உத்தரகாண்டின் ஹல்த்வானி பகுதியில் நேற்று (8.2.24) மாலை, அரசு அதிகாரிகள் கூட்டாக சென்று ‘மாலிக் கெ பாகிச்சே’ என்கிற இஸ்லாமிய கல்விச் சாலையை Bulldozer கொண்டு இடித்துள்ளனர். தடுத்து நிறுத்த முயன்ற மக்களை, காவல் துறை தடியடி நடத்தி அடித்துள்ளது. மேலும் அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது என சம்பவ இடத்திலிருந்த மக்கள் the wire ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர்.

கல்விச்சாலையை இடித்து கொண்டிருக்கும் போதே, “இந்த கட்டிடம், பொது இடத்திற்கு சொந்தமானது. ஆகையால் இடிக்கிறோம்,” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், மக்கள் அதற்கான உரிய சான்றுகளை காண்பிக்குமாறு தெரிவித்த போது, அதிகாரிகள் விடையளிக்காமல் இடிப்பு வேலைகளை தொடர்ந்துள்ளனர்.

இரயில்வே குடியிருப்பு பகுதியில் அமைந்த இஸ்லாமிய கல்விச்சாலையை இடித்ததற்கு பின், “இரயில்வே நிலங்களை விரிவுபடுத்த ஒன்றிய பா.ஜ.க முடிவெடுத்துள்ளது. ஆகையால், அங்கு அமைந்துள்ள 4000 குடும்பங்களையும் அப்புறப்படுத்தும் வேலைகள் தொடங்கப்படும்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் கடும் அதிருப்தி அடைந்து, அவ்விடத்தில் வன்முறை அதிகரித்தையடுத்து ஊரடங்கு அறிவித்ததோடு, shoot-on-sight (பார்த்தவுடன் சுடும்) ஆணையும் பிறப்பித்துள்ளது உத்தராகாண்ட் அரசு.

இதுகுறித்து, சம்பவ இடத்தில் வசிக்கும் ஒருவர் “நாங்கள் வீட்டிற்குள் கதவுகளை பூட்டிக்கொண்டிருந்தும், காவல்துறை எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அச்சத்துடன் வாழ்கிறோம். இதனை இந்த சம்பவங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் கல்விச்சாலை இடிப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அதிகாரிகள் இஸ்லாமிய கல்விச்சாலையை இடித்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Also Read: சிறையிலேயே கர்ப்பமாகும் பெண் கைதிகள்... பிறந்த 196 குழந்தைகள்... - கல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு !