India
முதலாளிகளின் வளர்ச்சிக்கான உத்தர பிரதேச பட்ஜெட் : ஏழை மக்களை கண்டு கொள்ளாத யோகி!
உத்தரப் பிரதேச மாநில அரசின் 2024 - 25 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நிதியமைச்சர் சுரேஷ் குமார் 2024 - 25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் இந்து மதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட பகுதிகளை இணைப்பதற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், சாலை வழி இணைப்பு, வான் வழி இணைப்பு மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் சந்தித்து வரும் நிதி சிக்கல்களுக்கான எவ்வித தீர்வும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிதியமைச்சர் சுரேஷ் குமார், “அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதற்கு பிறகு, சமூகம் மற்றும் பண்பாடு வலுவடைந்துள்ளது. ராமர் பிறந்த இடமான அயோத்திக்கு இந்த அரசு அதிக முக்கியத்துவத்தை கொடுக்கும். அதேபோல் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 25%, கல்விக்கு 17% மற்றும் வேளாண்மைக்கு 13% நிதி ஒதுக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.
பிறகு பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “இந்த பட்ஜெட் ராமருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இது உத்தரப் பிரதேசத்தின் கொண்டாட்ட காலம்,” என்று வெற்று பெருமிதம் கொண்டார்.
இது குறித்து முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், “பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் மக்களுக்கு உதவாத பட்ஜெட். உழவர்களையும், இளைஞர்களையும், மக்களையும் பாதுகாக்கிற வகையில்தான் ஒரு பட்ஜெட் இருக்க வேண்டும். அப்படி ஒன்று இந்த பட்ஜெட்டில் இல்லை. .
பா.ஜ.கவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான ‘உழவர்களின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்’ என்பதை இன்று அவர்கள் மறந்துவிட்டார்கள். 10% பணக்காரர்களுக்காகத்தான் பட்ஜெட்டில் 90% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,” என குற்றம்சாட்டினார்.
மேலும் உத்தர பிரதேசத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் துணை நிலை ஆசிரியர்கள் பணிகளில் 85,152 இடங்கள் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆனால் இது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ஆக மொத்தம் கல்வி, வேளாண்மை, வேலைவாய்ப்பு, பெண்களுக்கு என எவற்றுக்கும் தீர்வளிக்காத பட்ஜெட்டாக பா.ஜ.கவின் பட்ஜெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!