India

வங்கி கணக்கில் வெறும் ரூ.41... ஸ்டார் ஹோட்டலில் ரூ.6 லட்சத்துக்கு பில்... ஆந்திரா பெண் அட்டகாசம் !

நாட்டில் சில ஸ்டார் ஹோட்டலில் சிலர் தங்கி மோசடி செய்து வரும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருவது வழக்கம். குறிப்பாக இதுபோன்ற சம்பவம் டெல்லியில் பெரும்பாலும் நிகழ்கிறது. அதாவது நபர் ஒருவர் ஸ்டார் ஹோட்டலில் தங்கிவிட்டு, பில் செலுத்தாமல் செல்லும் சம்பவம் அரங்கேறி வரும். தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 13-ம் தேதி ஜான்சி ராணி சாமுவேல் என்ற பெண் ஒருவர் டெல்லியில் அமைந்துள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றி 15 நாட்களுக்கு தங்குவதற்காக வந்துள்ளார். அப்போது அவரது அடையாள அட்டைகள் உள்ளிட்டவையை பெற்றுக்கொண்ட ஊழியர்கள் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர். தொடர்ந்து அந்த பெண் அங்கிருக்கும் ஸ்பாவையும் பயன்படுத்தியுள்ளார்.

அந்த ஸ்பாவை பயன்படுத்தும்போது, தனது அடையாள அட்டையை அந்த பெண் காண்பித்துள்ளார். அப்போது அதில் அவர் பெயர் இஷா தேவ் என்று இருந்துள்ளது. தொடர்ந்து அதற்காக அவர் ரூ.2 லட்சம் பணத்தை ICICI வங்கி ஆப் மூலம் செலுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தங்கியதற்கு ரூ.6 லட்சம் பில் வந்த நிலையில், அதனையும் அதே ஆப்பை பயன்படுத்தி செலுத்தியுள்ளார்.

ஆனால் ஹோட்டல் ஊழியர்கள் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, அதில் இவர் செலுத்திய பணம் எதுவும் வரவில்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஊழியர்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பெண் தான் ஒரு டாக்டர் என்றும், தனது கணவர் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் டாக்டராக பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் எதற்காக ஸ்டார் ஹோட்டலில் தங்கினார் என்பது குறித்து விசாரிக்கையில், அவர் அதுகுறித்து பேச மறுப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பெண்ணின் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, அதில் வெறும் ரூ.14 மட்டுமே இருந்துள்ளது தெரியவந்தது.

வங்கி கணக்கில் ரூ.14 மட்டுமே வைத்திருக்கும் ஒரு பெண்ணால், எப்படி அவ்வளவு தொகையை செலுத்தியதாக ஊழியர்களிடம் காட்ட முடிந்தது என்று போலீசார் தற்போது விசாரணை வருகின்றனர். மேலும் அந்த ஆப் போலியானதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 21 ஆண்டுகள் சிறை - போக்சோ நீதிமன்றம் அதிரடி!