India

மத நல்லிணக்கத்திற்கு எதிரான பா.ஜ.க : மேற்குவங்கத்தில் சமூக நல்லிணக்க பேரணி நடத்திய மம்தா!

1992-ம் ஆண்டு இந்துத்துவ கும்பல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாகக் கூறி அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னரும் பாபர் மசூதி விவகாரம் இந்திய அளவில் பரபரப்பான விவகாரமாகத் திகழ்ந்தது. மேலும், பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள் விசாரணையிலிருந்து வந்தது.

அதனைத் தொடர்ந்து அயோத்தி நில வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியது. அந்த தீர்ப்பில், ராமர் கோயில் கட்ட முழு உரிமை ஒன்றிய அரசுக்கு வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உட்பட பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதே நேரம் ராமர் கோயில் திருப்பு விழாவை பா.ஜ.க தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்துகிறது என இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். மேலும் பா.ஜ.கவின் திட்டத்தை தவிடுபொடியாக்கும் வகையில் வியூகங்களை இந்தியா கூட்டணி தலைவர்கள் வகித்திருந்தனர்.

அதன்படி இன்று அசாம் நிலத்தில் நடைபயணத்தில் இருக்கும் ராகுல் காந்தி, ஸ்ரீ சங்கர தேவ் கோயிலுக்கு செல்ல முயன்றார். ஆனால் அம்மாநில பா.ஜ.க அரசு அவரை தடுத்து நிறுத்தியது. பிறகு , "என்னை கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கிறார்கள். நான் கோவிலுக்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. மேலே இருந்து உத்தரவு வந்துள்ளது எனபது தெளிவாக தெரிகிறது" என கருத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல், மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த சமூக நல்லிணக்க பேரணி நடைபெற்றது.

கொல்கத்தாவில் ஹஸ்ரா மோர் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பார்க் சர்க்கஸ் மைதானத்தை சென்றடைந்தது. கொல்கத்தாவில் பேரணி மேற்கொண்ட மம்தா பானர்ஜி பேரணியாக சென்ற வழியில் அமைந்துள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் குருத்துவாராகளில் வழிபாடு நடத்தினார். சமூக நல்லிணத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரகணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Also Read: நிதியமைச்சர் பரப்பிய வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது- முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!